இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்திநகர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
“தமிழகத்தில் இன்று மாநில அரசின் கட்டுப்பாட்டில் மொத்தம் 22 பல்கலைக்கழகங்கள் உள்ளன. இந்தியாவிலேயே தமிழகம் தான் உயர் கல்வியில் சிறந்து விளங்குகிறது. இதனை மேலும் வலிமைப்படுத்தும் வகையில் கல்லூரிகளில் மாணவிகளுக்காக “புதுமைப்பெண் திட்டம்” உள்ளிட்ட பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
அனைத்து மாநிலங்களும் திரும்பி பார்க்கும் வகையில் தமிழகத்தின் கல்வி திட்டங்கள் உள்ளன. மகாத்மா காந்தி கூறிய கொள்கைகள் அனைத்தும் இந்தியாவை ஒற்றுமைப்படுத்தும் விழுமியங்களாக உள்ளன.
மகாத்மா காந்தி, வட இந்தியர் அனைவரும் தமிழை கற்க வேண்டும் என்று சொன்னவர். ஆனால், மகாத்மா காந்தியை அரையாடை கட்டவைத்தது நம் தமிழ் மண். யாராலும் பறிக்க முடியாத சொத்து ஒன்று உண்டென்றால் அது கல்வி தான். அத்தகைய கல்வியை ஒன்றிய அரசு மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும்.
அரசியலமைப்பு என்ற ஒன்று உருவாக்கப்படும் போது கல்வி மாநில பட்டியலில் தான் இருந்தது. எமர்சென்சியின் போது தான் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. எனவே கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றவேண்டும்” என்று முதலமைச்சர் தெரிவித்தார்.