1.20 கோடி பயணிகள் பயன்படுத்தும் வகையில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் நொய்டா சர்வதேச விமான நிலையம்!

புதுடெல்லி,

நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கு(ஜெவர் விமான நிலையம்) கடந்த ஆண்டு பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. நொய்டா சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ள இடம், டெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து சுமார் 72 கிமீ தொலைவில் உள்ளது.

ஜீவார் விமான நிலையத்தின் கட்டுமானம் மற்றும் பராமரிப்புக்கான ஒப்பந்தம் சுவிட்சர்லாந்தின் சூரிச் சர்வதேச விமான நிலைய ஏஜி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அதன் கீழ், இந்த விமான நிலையத்தை யமுனா இன்டர்நேஷனல் ஏர்போர்ட் பிரைவேட் லிமிடெட் உருவாக்கி வருகிறது.இந்த நிறுவனம் விமான நிலையத்தை வடிவமைத்து வருகிறது. உத்தரபிரதேச அரசு இந்த விமான நிலையத்தை பொது-தனியார் கூட்டாண்மை(பிபிபி) முறையில் மேம்படுத்துகிறது.

நொய்டாவில் கட்டப்பட்டு வரும் ஜெவார் சர்வதேச விமான நிலையம் குறித்து தகவல் அளித்த இத்திட்டத்தின் மூத்த அதிகாரி கிறிஸ்டோபர் ஷ்னெல்மேன், விமான நிலையத்தின் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் 2024-ம் ஆண்டுக்குள் தயாராகிவிடும் என்றும் தெரிவித்தார்.

இதுகுறித்து தகவல் அளித்த கிறிஸ்டோபர் ஷ்னெல்மேன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி விமான நிலையத்தை கட்டி வருகிறோம். நொய்டா சர்வதேச விமான நிலையத்தை கட்டும் போது அனைத்து விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் பூர்த்தி செய்வோம்.இந்த விமான நிலையம் கட்டுவதற்கு மொத்தம் ரூ.5,730 கோடி நிதி கிடைத்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், ஓர் ஆண்டுக்கு சுமார் 12 மில்லியன்(1.20 கோடி) மக்கள் இந்த விமான நிலையத்தை பயன்படுத்த முடியும் என்றார்.

1300 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த விமான நிலையத்தின் முதற்கட்ட கட்டமைப்பை, ஓர் ஆண்டுக்கு சுமார் 1.20 கோடி மக்கள் பயன்படுத்த முடியும். ரூ.10,050 கோடி செலவில் விமான நிலையத்தின் முதற்கட்ட மேம்பாடு நடந்து வருகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.