காலையில் காதல் திருமணம், மாலையில் வரவேற்பு இரவில் திடீரென மயங்கி விழுந்து சென்னை புதுமாப்பிள்ளை சாவு: போலீசார் விசாரணை

காலாப்பட்டு: காலையில் திருமணம் முடிந்த நிலையில், இரவில் புதுமாப்பிள்ளை மயங்கி விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம் பெரிய கோட்டக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கோமதி (30). கோட்டக்குப்பம் நகராட்சி ஒப்பந்த ஊழியர். இவரும், சென்னை தாம்பரம் காந்தி நகரை சேர்ந்த காளிதாஸ் மகன் சுரேஷ்குமார் (30) என்பவரும் பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் படித்துள்ளனர். அப்போது, இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. சுரேஷ்குமார் சென்னையில் உள்ள நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர்களுக்கு இருவீட்டார் சம்மதத்துடன் புதுவை காலாப்பட்டு பாலமுருகன் கோயிலில் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதற்காக சுரேஷ்குமார் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் கோட்டக்குப்பம் வந்து தனியார் கெஸ்ட் ஹவுசில் தங்கியிருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை காலாப்பட்டு பாலமுருகன் கோயிலில் கோமதிக்கும், சுரேஷ்குமாருக்கும் திருமணம் நடந்தது. மாலையில் கோட்டக்குப்பம் தனியார் திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர். வரவேற்பு முடிந்த பின்னர், சிறிது நேரம் ஓய்வு எடுப்பதற்காக இரவில் சுரேஷ்குமார் கெஸ்ட் ஹவுசுக்கு சென்றார். அங்கு திடீரென அவர் மயங்கி விழுந்தார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக அவரை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.