வேலூர்: அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியரல்லாத அமைச்சு பணியிடங்களில் மாற்றுப்பணி மூலம் சமாளிக்க வேண்டும் என்றும், இதுதொடர்பாக விவரங்களை சமர்ப்பிக்கவும் பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியரல்லாத பணியிடங்கள் நிர்ணயிக்கப்பட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது பணியிடங்கள் அனுமதிக்கப்பட்ட சில பள்ளிகளில் உதவியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்களில் பணியாளர்கள் எவரும் இன்றி காலியாக உள்ளன.
இதையடுத்து ஆசிரியரல்லாத பணியிடங்களில் ஒரு பணியிடத்திலும் பணியாளர்கள் இன்றி காலியாக உள்ள மேல்நிலைப்பள்ளிகளுக்கு அருகில் உள்ள உயர்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் உதவியாளர், இளநிலை உதவியாளர்களை வாரத்தில் இரண்டு நாட்கள் தாங்கள் பணிபுரியும் பள்ளியிலும், மூன்று நாட்கள் பணியிடங்கள் காலியாக உள்ள மேல்நிலைப்பள்ளியிலும் மாற்றுப்பணியாக பணிபுரிய வேண்டும். மாற்றுப்பணி வழங்கப்பட்ட பள்ளிகளின் முழுவிவரத்தை மாவட்ட அளவில் பட்டியலிட்டு நாளைக்குள் சமர்ப்பிக்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.