இது ரொம்ப சீரியசான விஷயம்… உடனே ஆக்‌ஷன் எடுங்க..! – சுப்ரீம் கோர்ட் பரபரப்பு கருத்து

கட்டாய மதமாற்றம் மிக தீவிரமான பிரச்னை என்று கருத்துத் தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது.

சூனியம், மூட நம்பிக்கை மற்றும் வலுக்கட்டாய மத மாற்றங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வழக்கறிஞரும், பாஜக தலைவருமான அஸ்வினி குமார் உபாத்யாய், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் இன்று, இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர். ஷா மற்றும் ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய அமர்வு, கட்டாய மதமாற்றம் மிகவும் தீவிரமான பிரச்னை என்றும், இது நாட்டின் பாதுகாப்பு மற்றும் மத சுதந்திரத்தை பாதிக்கிறது என்றும் தெரிவித்தது.

மேலும், நீதிபதிகள் கூறியதாவது:

கட்டாய மதமாற்றம் மிகவும் தீவிரமான பிரச்னை. கட்டாய மதமாற்றத்தை தடுக்க மத்திய அரசு தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில், மிகவும் கடினமான சூழ்நிலை உருவாகும். இது நாட்டின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமையும். இது தொடர்பாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை தெரிவிக்க வேண்டும். கட்டாய மதமாற்ற விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும். வரும் 22 ஆம் தேதிக்குள் இந்த விவகாரத்தில் எதிர் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

பாரதிய ஜனதா கட்சி ஆளும் மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ஹரியானா, கர்நாடா ஆகிய மாநிலங்கள் கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக சட்டங்களை இயற்றி உள்ளன. இதன்படி வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்பவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க வகை செய்யப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.