ராதாபுரம்: நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் இயங்கி வரும் அணுமின் நிலையத்தில் ஏராளமான ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் 40% வரை தனியார் நிறுவனங்கள் கமிஷனாக எடுத்துக் கொள்வதாகக் பாதிக்கப்பட்ட உள்ளூர் கிராம இளைஞர்கள் கூடங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் புகார் அளித்த உள்ளூர் ஒப்பந்த தொழிலாளர்கள் 25 பேரை பணியில் இந்து ஒப்பந்த நிறுவனம் திடீரென சஸ்பெண்ட் செய்தது. அவர்களுக்கு மீண்டும் பணி வழங்க தாசில்தார் முன் ஒப்புக்கொண்ட தனியார் நிறுவனம் மீண்டும் வேலை தரவில்லை. இதையடுத்து மீண்டும் பணி வழங்க அணுமின் நிலைய வளாகத்திற்கு சபாநாயகர் அப்பாவு நேற்று சென்று வலியுறுத்தினார். தகவலறிந்த நெல்லை கலெக்டர் விஷ்ணு, சபாநாயகர் அப்பாவுவிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, இரு நாட்களில் இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என உறுதியளித்தார். இதை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் அப்பாவு, பிற்பகல் 3.30 மணி அளவில் அங்கிருந்து சென்றார்.