கொலை வழக்கில் பொய்யாக சேர்க்கப்பட்டவர் விடுதலை இன்ஸ்பெக்டரை விசாரணை அதிகாரியாக மூன்று ஆண்டுகளுக்கு நியமிக்க தடை

 *இழப்பீட்டை சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யவும் தேனி நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தேனி: கொலை வழக்கில் பொய்யாக சேர்க்கப்பட்ட வாலிபரை விடுவித்த தேனி நீதிமன்றம், வழக்கை விசாரித்த இன்ஸ்பெக்டரை மூன்று ஆண்டுகளுக்கு எந்த வழக்குகளிலும் விசாரணை அதிகாரியாக நியமிக்கக்கூடாது என அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம், உத்தமபாளையம் காளியம்மன்கோயில் தெருவை சேர்ந்தவர் பிரிதிவிராஜ் (42). இவர் மனைவி ஹெலினா வளர்மதி. தம்பதிக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கான விவாகரத்து வழக்கு நிலுவையில் இருந்தது.

இந்நிலையில், கணவன் மனைவி பிரிவிற்கு ஹெலினாவின் சகோதரர் லாரன்ஸ் காரணம் என பிரிதிவிராஜ் கருதினார். இதனையடுத்து, 2017, நவம்பர் 22ம் தேதி டூவீலரில் லாரன்ஸ் வந்தபோது, பிரிதிவிராஜ், தான் வைத்திருந்த பெட்ரோலை லாரன்ஸ் மீது ஊற்றி தீ வைத்தார். இதில் படுகாயம் அடைந்த லாரன்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து புகாரில், உத்தமபாளையம் போலீசார் பிரிதிவிராஜ் மற்றும் அவரது நண்பர் ராஜேஷ் குமார் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.இவ்வழக்கு விசாரணை தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் கூடுதல் அரசு வக்கீல் சுகுமாரன் ஆஜரானார். வழக்கு விசாரணை முடிவடைந்ததையடுத்து, தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சி.சஞ்சய் பாபா தீர்ப்பளித்தார். தீர்ப்பில் குற்றம்சாட்டப்பட்ட பிரிதிவிராஜ் குற்றவாளி என்பதை உறுதி செய்து, அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தார்.

இவரது நண்பர்  ராஜேஷ் குமார் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் அவரை விடுதலை  செய்து தீர்ப்பளித்தார். மேலும் தனது தீர்ப்பில் நீதிபதி, ‘‘இரண்டாம்  குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள பிரிதிவிராஜின் நண்பர் ராஜேஷ் குமார்  பொய்யாக இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது விசாரணையில்  கண்டறியப்பட்டுள்ளது. எனவே அனைத்து குற்றச்சாட்டுகளிலும்  இருந்து அவர் விடுவிக்கப்படுகிறார். இதனால் ஏற்பட்ட பாதிப்பிற்கு  ராஜேஷ்குமார் இழப்பீடு பெற தகுதியானவராக இருக்கிறார். அவர் இந்த  வழக்கின் விசாரணை அதிகாரியும், தற்போதைய சிவகங்கை மாவட்ட குற்றப் பிரிவில்  இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவருமான ராமகிருஷ்ணனிடமிருந்து உரிய இழப்பீடு  பெறுவது சம்பந்தமாக உரிய நீதிமன்றத்தை நாடி பரிகாரம் தேடலாம்.

ஏனெனில் அவர்  29 நாட்கள் சட்டவிரோதமாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.  அவருக்குரிய இழப்பீட்டை இன்ஸ்பெக்டரின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்து  வழங்கலாம். இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணனை 3 ஆண்டுகளுக்கு எந்த  வழக்கிலும் விசாரணை அதிகாரியாக நியமிக்கக்கூடாது. இதுதொடர்பாக டிஜிபி  நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனெனில் அவர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி  உள்ளார். வழக்கில் தொடர்பில்லாத ஒருவரை கொலை குற்றச்சாட்டுகளில் பொய்யாக  சேர்த்துள்ளார். எனவே, அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கைக்கு  பரிந்துரைக்கப்படுகிறது’’ என தனது தீர்ப்பில்  குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.