புதுக்கோட்டை அருகே பைக்கில் சென்ற அண்ணன், தங்கை உட்பட 3 பேர் மின்னல் தாக்கி பலி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே பைக்கில் சென்றபோது மின்னல் தாக்கி அண்ணன், தங்கை, சித்தப்பா என 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். புதுக்கோட்டை மாவட்டம், திருப்புனவாசல் காவல் நிலைய எல்லைக்குபட்ட பறையூர் கிராமத்தை சேர்ந்த பழனிச்சாமி மகன் சஞ்சய் (18), மகள் சஞ்சனா (16). திருப்புனவாசல் தனியார் பள்ளியில் சஞ்சய் 12ம் வகுப்பும், சஞ்சனா 10ம் வகுப்பும் படித்து வந்தனர். பள்ளி முடிந்த பிறகு தினமும் குடும்பத்தில் உள்ளவர்கள் யாராவது சென்று வீட்டுக்கு பைக்கில் அழைத்து வருவது வழக்கம்.இந்நிலையில் பள்ளிக்கு சென்ற சஞ்சய், சஞ்சனாவை அழைத்து வர இவர்களது சித்தப்பா பறையூரை சேர்ந்த இளையராஜா (38) என்பவர் நேற்று மாலை தனது பைக்கில் திருப்புனவாசல் பள்ளிக்கு சென்றார்.

பள்ளி முடிந்த பின்னர் மூவரும் பைக்கில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். சிங்கார கோட்டை கோயில் அருகே வந்தபோது, திடீரென இடி மின்னல் தாக்கியது. இதில் மூவரும் கீழே விழுந்து மயக்கம் அடைந்தனர். இதை பார்த்த அப்பகுதி மக்கள் 3 பேரையும் மீட்டு, திருப்புனவாசல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், 3 பேரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து திருப்புனவாசல் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மின்னல் தாக்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.