3 நாட்களில் ரூ.20 கோடி வசூலித்த 'யசோதா'

ஹரி – ஹரிஷ் இயக்கத்தில், மணி சர்மா இசையமைப்பில், சமந்தா, வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான தெலுங்குப் படம் 'யசோதா'. முதன்மைக் கதாநாயகியாக சமந்தா நடித்துள்ள இந்தப் படம் தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் ஆகி பான் இந்தியா படமாக வெளிவந்தது.

முன்னணி தெலுங்கு கதாநாயகர்கள் நடித்து வெளிவரும் படங்களே வசூலில் தடுமாறிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் இப்படம் குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்று வருகிறது. வெளியான மூன்று நாட்களில் 20 கோடி ரூபாய் வசூலித்து பிளாக் பஸ்டர் வெற்றி பெற்றுள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீதேவி மூவிஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இப்படத்திற்காக பெரிய அளவில் எந்த புரமோஷனையும் செய்யவில்லை. தனது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் சமந்தாவால் எந்த பொது நிகழ்வுகளிலும் பங்கு பெற முடியவில்லை. அதனால், அவரது பேட்டியை தமிழ், தெலுங்கில் பதிவு செய்து தயாரிப்பு நிறுவனம் யூ டியூபில் வெளியிட்டது. அந்த ஒரு வீடியோவைப் பார்த்தே ரசிகர்கள் தியேட்டர்களுக்கு அதிக அளவில் வந்துள்ளதாக டோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.