Coimbatore: கடந்த 1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சத்தியமங்கலத்தில் இருந்து அந்தியூர் செல்லும் வழியில் கொங்குருபாளையம் பகுதியில் உள்ள குண்டேரிப்பள்ளம் அணையின் அருகில் வனச்சரகர் சிதம்பரநாதன் உள்பட மூன்று பேர் வீரப்பனால் கொலை செய்யப்பட்டனர். இது குறித்து ஈரோடு மாவட்டம் பங்களாபுதூர் காவல் துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இறுதியாக விசாரணை முடிவில் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு செஷன்ஸ் கோர்ட் தீர்ப்பளித்தது. இதில் மேட்டூர் கருமலைக்கூடல் பகுதியில் வசித்து வந்த சந்தன கடத்தல் வீரப்பனின் அண்ணன் மாதையன் மற்றும் ஆண்டியப்பன், பெருமாள் ஆகியோரை கைது செய்தனர். 3 பேரும் கோவை மத்திய சிறையில் சிறைவாசம் அனுபவித்து வந்தனர்.
பல ஆண்டுகளாக கோவை சிறையில் இருந்த மாதையன் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சேலம் மத்திய சிறையில் காவல் துறையினர் அடைத்தனர். இந்த நிலையில் மாதையனுக்கு வயது மூப்பு காரணமாக அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனது. இதையடுத்து கடந்த மாதம் சிறை காவல் துறையினர் அவரை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாதையன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஆண்டியப்பன் மற்றும் பெருமாள் ஆகிய மற்ற இரண்டு குற்றவாளிகள் கோவை மத்திய சிறையில் சிறை தண்டனை அனுபவித்து வந்தனர். 32 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் இருவரையும் விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் ஆண்டியப்பன், பெருமாள் ஆகிய இருவரும் நேற்று முன் தினம் கோவை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை மனித உரிமை ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.
முன்னாள் தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு நீண்டகால சிறை கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்படுவது வழக்கம். இந்தாண்டு 322 கைதிகளை விடுதலை செய்ய ஆளுநர் ஆர்.என்.ரவி. ஒப்புதல் அளித்தார். அதில் 35 ஆண்டுகாலம் சிறை தண்டனை அனுபவித்த சந்தனக் கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகள் ஆண்டியப்பன் (53) மற்றும் பெருமாள் (59) இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.