ஐக்கிய அமெரிக்காவின் செனட் சபையின் வெளிநாட்டு உறவுகள் குழுவின் (Senate Foreign Relations Committee) பணியாட்தொகுதியின் அதிகாரிகள் குழு, சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவை அண்மையில் (10) சந்தித்தனர்.
இந்தக் குழுவினர் பாராளுமன்றத்தில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருந்ததுடன், சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக ஆகியோரையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர். இதன் போது இவர்கள் பாராளுமன்றத்தின் குழு முறைமைகள் குறித்து சபாநாயகர் மற்றும் செயலாளர் நாயகத்துடன் விரிவாகக் கலந்துரையாடினர். அத்துடன், பாராளுமன்றத்தின் அமைவிடம், வரலாறு மற்றும் கட்டட வடிவமைப்புத் தொடர்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் இக்குழுவினருக்கு விளக்கமளித்தார்.
இதன் பின்னர் இந்தக் குழுவினர் சபாநாயகர் மற்றும் செயலாளர் நாயகத்துடன் பகல் விருந்துபசாரத்திலும் கலந்துகொண்டனர்.
அத்துடன், இந்தச் சந்திப்பில் யுஎஸ்எயிட் நிறுவனத்தின் செயற்பாட்டுப் பணிப்பாளர் (இலங்கை மற்றும் மாலைதீவு) கப்ரியால் பெர்னாந்து க்ரேவ் மற்றும் NDI நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் துசிதா பிலபிட்டிய உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.