இந்தியாவை போல பாக்., உடனும் அமெரிக்கா கண்ணியமான உறவு: இம்ரான் கான் விருப்பம்| Dinamalar

இஸ்லாமாபாத்: இந்தியாவுடன் அமெரிக்காவுக்கு கண்ணியமான உறவு இருப்பதை போல், பாகிஸ்தானுடனும் அமெரிக்காவுக்கு கண்ணியமிக்க உறவு இருக்க வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் விருப்பம் தெரிவித்துள்ளார்.

நம் அண்டை நாடான பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், பாக்., தெஹ்ரீக் – இ – இன்சாப் கட்சித் தலைவருமான இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது தான் ரஷ்யாவுக்கு சென்றதால், பாகிஸ்தான் மீது அமெரிக்கா கோபத்தில் உள்ளதாக குற்றம் சாட்டினார்.

பின்னர் நம்பிக்கை ஓட்டெடுப்பில் தோல்வியடைந்து பிரதமர் பதவியில் இருந்து வெளியேறியதற்கு அமெரிக்கா திட்டமிட்டு சதி செய்ததாகவும் குற்றம் சாட்டினார். இந்த நிலையில் இந்தியாவை போன்று, பாகிஸ்தான் நாட்டுடனும் அமெரிக்கா கண்ணியமான உறவு வைத்திட வேண்டும் என இம்ரான் கான் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து பத்திரிகை ஒன்றிற்கு இம்ரான் கான் அளித்த பேட்டி: அமெரிக்காவுடன் இந்தியா மிக கண்ணியம் வாய்ந்த உறவை கொண்டுள்ளது. இதுபோன்ற கண்ணியமிக்க உறவு பாகிஸ்தான் நாட்டுடனும் இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.

உக்ரைனுடனான போரின்போதும், ரஷ்ய எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது. இந்த சூழலில், தனது மக்களுக்கு முக்கியத்துவம் அளித்து, இறக்குமதி செய்யாமல் இருக்க முடியாது என அமெரிக்காவுக்கு இந்தியா பதில் கூறுகிறது. அமெரிக்காவுடன் பாகிஸ்தானும் நட்புறவுடன் இருக்க விரும்புகிறது.

குறைவான விலையில் ரஷ்ய எண்ணெயை வாங்கும் தனது விருப்பத்தினை பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி முன்பே ரஷ்யாவிடம் தெரிவித்து விட்டது. ரஷ்ய எண்ணெய்யை நாங்கள் வாங்குவது பற்றி அமெரிக்க அதிகாரிகளிடம் முன்பே தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டது. அதனால், அமெரிக்கா அதனை தடுக்க முடியாது.

ஏனெனில், பாகிஸ்தானின் அண்டை நாடான இந்தியாவும், ரஷ்ய எண்ணெய்யை வாங்குகிறது. அதன்படி, எங்களது அமைச்சகமும் ரஷ்ய எண்ணெய்யை வாங்கும். அதற்கான முக்கிய நடவடிக்கைகளை வருகிற மாதங்களில் அரசு மேற்கொள்ளும். இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.