திருச்சி அருகே மாணவி கூட்டு பலாத்காரம்.. வீடியோவில் பதிவுசெய்து பரப்பிய கொடூரம்..!

திருச்சி அருகே, பிளஸ்-1 மாணவியை 5 பேர் கூட்டு பலாத்காரம் செய்து, அதனை வீடியோவில் பதிவு சமூக வலைதளங்களில் பரப்பிவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் முசிறி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ரெங்கநாதன். கூலித்தொழிலாளியான இவர் சரிவர வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து குடித்து, ஊர் சுற்றி வந்துள்ளார். அப்போது பக்கத்து வீட்டில் வசித்து வரும் மாணவியுடன் ரெங்கநாதனுக்கு பழக்கம் ஏற்பட்டது.

இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ரெங்கநாதன், மாணவியை பல நாட்கள் பள்ளிக்கு செல்லவிடாமல் தன்னுடன் ஊர் சுற்ற அழைத்துச் சென்றுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் மாணவியை திருச்சி – முசிறி சாலையில், அய்யம்பாளையம் அருகில் உள்ள கோட்டூர் காவிரி படுகை பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். முன்னதாக அந்த இடத்திற்கு வந்துவிடுமாறு தனது நண்பர்கள் 5 பேருக்கும் ரெங்கநாதன் அழைப்பு விடுத்துள்ளார். காவிரி படுகையில் மறைவான பகுதிக்கு மாணவியை அழைத்து சென்ற ரெங்கநாதன் அவருடன் உடலுறவு கொண்டுள்ளார்.

இதனை அங்கு மறைந்திருந்த அவரது நண்பர்கள் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இதனை அறிந்த மாணவி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவரிடம் இதுதொடர்பாக பெற்றோரிடமோ, போலீசாரிடமோ கூறினால் ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவோம் என்று மிரட்டி உள்ளனர். அதற்கு பயந்து மாணவியும் வாய் திறக்கவில்லை. இதைத்தொடர்ந்து அதற்கு அடுத்த வாரமும் இதேபோல் மாணவியை ரெங்கநாதன் உள்பட அவரது நண்பர்கள் 5 பேரும் அழைத்துச் சென்று மிரட்டி ஒருவர் பின் ஒருவராக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதற்கிடையே, மாணவியின் செயல்பாடுகளில் மாற்றத்தை அறிந்த அவரது பெற்றோர், இதுகுறித்து மாணிவியிடம் காரணம் கேட்டனர். ஆனால் அவர் எதுவும் இல்லை என்று சொல்ல மறுத்துவிட்டார். இருந்தபோதிலும் மகளை அவரது தந்தை தொடர்ந்து கண்காணித்து வந்தார். ஒருநாள் பள்ளி முடிந்து நீண்ட நேரமாகியும் மாணவி வீடு திரும்பவில்லை. பள்ளிக்கு சென்று விசாரித்தபோது அவர் வகுப்புக்கு வரவில்லை என்ற தகவல் அறிந்து அவரது தந்தை அதிர்ந்து போனார்.

அதேநாளில் இரவு வேளையில் மகள் வாலிபர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் செல்வதை பார்த்துவிட்டார். மகள் வீட்டிற்கு வந்ததும் அந்த வாலிபர் குறித்து கேட்டபோது தனது நண்பர் என்று கூறியுள்ளார். அவரது பதிலில் திருப்தி அடையாத தந்தை, மகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தார். மேலும் மாணவியின் படிப்புக்கும் தடைவிதித்தார். அடுத்த ஒருசில நாட்களில் உறவினர் ஒருவருக்கு மகளை திருமணமும் செய்து கொடுத்தார். இந்த தகவல் அறிந்த சமூக நலத்துறையினர் குழந்தை திருமணம் குறித்து வழக்குப்பதிவு செய்து, மாணவியை அவரது கணவரிடம் இருந்து பிரித்து காப்பகத்தில் சேர்த்தனர்.

இந்த நிலையில், மாணவியுடன் பாலியல் உறவு வைத்திருந்த ரெங்கநாதன் மற்றும் அவரது நண்பர்கள் மாணவியை தேடி அலைந்தனர். அப்போது அவர்களுக்கு, மாணவிக்கு திருமணமான தகவல் தெரிந்தது. இதற்கிடையே ரெங்கநாதனுடன் மாணவி உடலுறவு கொண்ட வீடியோவை அவரது நண்பர்கள் சமூக வலைதளங்களில் பரப்பி விட்டனர். அந்த வீடியோ மாணவியின் தந்தை பார்வைக்கும் வந்துள்ளது.

இது குறித்து அவர் முசிறி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் காவிரி வழக்குப்பதிவு செய்து ரெங்கநாதன், மணிகண்டன் ஆகிய இருவரை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மற்ற 3 பேரையும் தேடி வருகிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.