திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க டிசம்பர் மாத ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் ஆன்லைனில் நாளை வெளியீடு

திருமலை: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க டிசம்பர் மாதத்திற்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் நாளை ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டிசம்பர் மாதம் நடைபெறும் ஆர்ஜித சேவைகளுக்கான மெய்நிகர் டிக்கெட்டுகள் நாளை (புதன்கிழமை) காலை வெளியிடப்படுகிறது. இதில் கோயிலில் நடைபெறும் கல்யாண உற்சவம், ஆர்ஜித  பிரம்மோற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ரதீப அலங்கார சேவையில் நேரடியாக பக்தர்கள் பங்கேற்க முடியாது.

இந்த டிக்கெட்களை வைத்து சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். எனவே, பக்தர்கள் தாங்கள் விரும்பும் சேவைக்கான டிக்கெட்டை பெற்று பின்னர் டிசம்பர் மாதத்தில் தங்களுக்கு உரிய தேதியில் சுவாமி தரிசனம் செய்ய பதிவு செய்து கொள்ளலாம். இந்த டிக்கெட்கள் நாளை காலை 10 மணிக்கு  ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* 36 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 69,814 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 29,228 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ரூ.4.17 கோடி காணிக்கை செலுத்தினர். இன்று காலை திருமலையில் உள்ள வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31  அறைகள் நிரம்பியுள்ளது. பக்தர்கள் 36 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் 3 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர். திருமலையில் இன்று காலை லேசான மழை பெய்தது. குளிர்காற்று வீசியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.