மக்களே உஷாரா இருங்க.. நூதன மோசடி அதிகரிப்பு: பெண்ணிடம் ரூ.2.16 லட்சம் அபேஸ்..!

சேலத்தில் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக கூறி ஆன்லைன் மூலம் பெண்ணிடம் ரூ.2.16 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் நரசோதிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மீனாபாரதி (45). இவர், கடந்த 14-ம் தேதி மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், “நான், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளேன். கடந்த 13-ம் தேதி என்னுடைய செல்போன் எண்ணுக்கு வந்த குறுஞ்செய்தி தகவலில், எனது வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகவும், அதனை புதுப்பிக்க அதில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று அப்டேட் செய்யுமாறும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால், அது உண்மை என்று நம்பிய நான், அதில் தெரிவித்திருந்த லிங்கை ஓபன் செய்து என்னுடைய வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் எனக்கு வந்த ஓடிபி ஆகியவற்றை பதிவு செய்தேன். அதன்பிறகு எனது வங்கிக் கணக்கில் இருந்து மூன்று தவணைகளில் ரூ.2 லட்சத்து 16 ஆயிரத்து 997-ஐ மோசடியாக மர்ம நபர்கள் எடுத்து விட்டனர். எனவே, நான் இழந்த பணத்தை மீட்டுத்தர வேண்டும்” என்று கூறி இருந்தார்.

இந்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தியதில், மீனாபாரதியின் வங்கிக் கணக்கில் இருந்த பணம், ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளுக்கு சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அதன் வங்கிகளின் நிர்வாகங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர், மீனாபாரதியிடம் இருந்து மோசடியாக ஏமாற்றிய பணத்தில் 1 லட்சத்து 91 ஆயிரத்து 997 ரூபாயை மீட்டு அவரது வங்கிக் கணக்கில் திரும்ப சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், மோசடியில் ஈடுபட்ட நபரை பற்றியும், மீதமுள்ள தொகையை அவருக்கு திரும்ப கிடைக்கவும் விசாரணை நடந்து வருவதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.