தமிழகத்தில் ஊர்வலம்… ஆர்எஸ்எஸ் அமைப்பு ஐகோர்ட்டில் அப்பீல்!

அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று தமிழகத்தில் 50 இடங்களில் ஊர்வலம் நடத்த அனுமதிக்க கோரி ஆர்எஸ்எஸ் அமைப்பு தாக்கல் செய்ய மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் ஊர்வலம் நடத்த அனுமதி அளித்தது.

சட்டம் ஒழுங்கு சூழலை காரணம் காட்டி ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்த தமிழக அரசின்உத்தரவை அடுத்து ஆர்எஸ்எஸ் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 6 இடங்களை தவிர்த்து மீதமுள்ள 44 இடங்களில் உள்ளரங்க நிகழ்வாக ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு அனுமதி அளித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கி செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உயர் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட காலத்தில் மற்ற அரசியல் கட்சியினரின் போராட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாகவும், கருத்து சுதந்திரம் உள்ளிட்ட அம்சங்களை கருத்தில் கொள்ளாமலும் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்ததாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

மாநிலம் முழுவதும் 50 இடங்களில் பேரணி நடத்த ஆர்எஸ்எஸ் அனுமதி கோரியிருந்த நிலையில் கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், திருப்பூர், பல்லடம், கன்னியாகுமரி ஆகிய ஆறு இடங்களை தவிர்த்து, மீதம் 44 இடங்களில் நவம்பர் 6 ஆம் தேதி பேரணி நடத்த அனுமதி அளித்து, சென்னை உயர் நீதிமமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதேசமயம் நிகழ்ச்சியின் போது பாடல்கள் பாடவோ, தனிப்பட்ட நபர்கள், மதம், ஜாதி குறித்து தவறாக பேசவோ கூடாது. தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் குறித்து பேசவோ, கருத்து தெரிவிக்கவோ கூடாது. லத்தி, கம்பு போன்ற ஆயுதங்கள் எடுத்துச் செல்லக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்திருந்தது நீதிமன்றம்.

இந்த நிபந்தனைகளால் அதிருப்தி அடைந்த ஆர்எஸ்எஸ் நவம்பர் 6 ஆம் தேதி நடத்துவதாக அறிவித்திருந்த பேரணி ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்திருந்தது. கேரளா, மேற்கு வங்கம், காஷ்மீர் போன்ற மாநிலங்களில் பொதுவெளியில்தான் தங்களது பேரணி நடத்தப்படுகிறது. ஆனால், சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில், உள் அரங்கிலோ, நான்கு சுவர்களுக்குள்ளோ ஊர்வலத்தை நடத்தி கொள்ளமாறு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிபந்தனையை தங்களால் ஏற்றுகொள்ள முடியாது என்பதால், உயர் நீதின்ற தீர்ப்பு எதிராக மேல்முறையீடு செய்ய வசதியாக பேரணி ஒத்திவைக்கப்படுவதாக ஆர்எஸ்எஸ் விளக்கம் அளித்துள்ளது. ஆனஈலும் தமிழக அரச அனுமதி அளித்திருந்த கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் மட்டும் ஏற்கெனவே திட்டமிட்டப்படி நவம்பர் 6 ஆம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி பொதுவெளி நடத்தப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.