அடுத்த நெருக்கடி..! பக்கா ஸ்கெட்ச் – வசமாக சிக்கிய ராஜேந்திர பாலாஜி

தமிழகத்தை விட்டு வெளியே பயணம் செய்ய அனுமதி கோரிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கோரிக்கையை நிராகரித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி, 3 கோடி ரூபாய் மோசடி புகார் தொடர்பான வழக்கில், தமிழக பால்வளத் துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் ரிட் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், 4 வாரம் இடைக்கால நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டதுடன், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள காவல் நிலைய எல்லையைத் தாண்டி பயணிக்கக் கூடாது என, கடந்த ஜனவரி மாதம் 12 ஆம் தேதி உத்தரவிட்டது.

இந்த ஜாமின் நிபந்தனையை தளர்த்தக் கோரிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு கடந்த செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி விசாரித்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்ச நீதிமன்றம், இடைக்கால ஜாமினை மேலும் 4 மாதங்களுக்கு நீட்டித்ததுடன், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள காவல் நிலைய எல்லையைத் தாண்டக் கூடாது என்ற நிபந்தனையை தளர்த்தி தமிழக முழுவதும் பயணம் செய்யவும், பாஸ்போர்ட்டை புதுப்பிக்கவும் அனுமதி அளித்தது. மேலும், விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளி வைத்தது.

அதன்படி கடந்த 1 ஆம் தேதி இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது, நாடு முழுவதும் பயணம் செய்யும் வகையில் ஜாமின் நிபந்தனையை தளர்த்த வேண்டும் என்றும், மனுதாரருக்கு எதிராக பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி ரிட் மனுவை விசாரிக்க வேண்டும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது.

அப்போது, தமிழக அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரி, ராஜேந்திர பாலாஜிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமின் தொடரக் கூடாது. இது தொடர்பாக தமிழக அரசிடம் ஆலோசனை பெற வேண்டும் என்று தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் ஜாமின் நிபந்தனையை தளர்த்த கோரிய மனு மீதான இறுதி விசாரணையை இன்றைக்கு ஒத்தி வைத்திருந்தது.

இந்நிலையில் இன்று, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் ஜாமின் நிபந்தனையை தளர்த்தக் கோரிய மனு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தை விட்டு வெளியே செல்ல அனுமதி வேண்டும் என ஜாமின் நிபந்தனை தளர்வு கோரிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. மேலும், 45 நாட்களில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய தமிழக காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.