மத்திய பிரதேச மாநிலம் ஷிவ்புரி மாவட்டத்திலுள்ள தாரா – தேரி என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹர்ஷ்வர்தன் மெஜேஜி . கணினி பொறியியல் பட்டதாரியான இவர், இந்தூரிலுள்ள பெரிய நிறுவனம் ஒன்றில் அதிக சம்பளத்துடன் வேலைப் பார்த்து வந்துள்ளார். ஹர்ஷ்வர்தன் விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் என்பதால், இயல்பிலேயே விவசாயத்தின் மீது ஈடுபாடு கொண்டவர். இவர் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளையும் அவர்களின் விவசாய முறைகளை அக்கறையுடன் கவனித்து ஆராய்ந்து வந்தார்.
இவர் பெறியாளராக பணியாற்றிவந்த சமயத்தில், இந்தூர் பகுதியிலுள்ள மக்கள் வழக்கமான பாரம்பரிய பயிர்களை நடுவதற்கு பதில் புது வகையான பயிர்களை நட்டு விவசாயம் செய்து வருவதை கவனித்தார்.
தன கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தவர், இந்த விவசாய முறையைத் தன் கிராமத்தில் உள்ள விவசாயிகளும் கையாண்டால் அதிக பலன் கிடைக்கும் என்பதை அறிந்தார்.
விவசாயிகளுக்கு இந்த முறைகளை சொல்லிக் கொடுப்பதோடு, லாபகரமான விவசாயத்தில் முன்னோடியாக செயல்பட வேண்டும் என்று தீர்மானித்தார். எனவே, ஹர்ஷ்வர்தன் மெஜேஜி, தான் செய்து வந்த பொறியாளர் வேலையை விட்டுவிட்டு, தன் சொந்த கிராமத்துக்கு விவசாயம் செய்ய சென்றார். முதல் ஆண்டில் ரூ.20 லட்சம் சம்பாதிக்க இலக்கு நிர்ணயித்து களத்தில் இறங்கியுள்ளார்.
ஹர்ஷ்வர்தன் அவர் கண்டறிந்த புதிய பரிசோதனை முறையை பயன்படுத்தி, தனது நிலத்தில் குடமிளகாயை பயிரிட்டார். சொட்டு நீர்ப் பாசனம் அமைத்து சாகுபடி செய்த இவர் இதுவரை 100 குவிண்டால் குடமிளகாயை அறுவடை செய்துள்ளார். தற்போது சந்தையில் ஒரு கிலோ குடை மிளகாய் (கேப்சிகம்) ரூ.40 முதல் 50 வரை விற்பனை செய்யப்படுகிறது. வரும் காலங்களில் வானிலை சாதகமாக இருந்தால், 20 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டும் இலக்கை எளிதாக எட்டுவார்.
“ஷிவ்புரி மாவட்டத்திலுள்ள விவசாயிகள் பாரம்பரிய பயிர்களான கோதுமை, பருப்பு, நிலக்கடலை மற்றும் சோயாபீன் ஆகியவற்றை பயிரிடுகின்றனர். இந்த பயிர்கள் சிலசமயம் லாபத்தை ஈட்டினாலும், அது கடினமான வேலைகளை வாங்குகிறது. ஆனால், அனைத்து விவசாயிகளும் புதிய விவசாய நுட்பங்களைப் பயன்படுத்தினால் அதிக மகசூல் மற்றும் நல்ல லாபத்தை அனுபவிக்க முடியும்” என்று கூறும் ஹர்ஷ்வர்தன் தனது கிராமத்தில் புதிய தொழில்நுட்பங்களைப் பற்றிய விழிப்புணர்வை விவசாயிகள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறார்.