புதுடெல்லி: ஜனநாயக ரீதியிலான விவாதங்கள், ஆலோசனைகள் நிறைவு பெற்ற பிறகு பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்படும். அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும். பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் ஆகிய முப்பெரும் வாக்குறுதிகளை பாஜக அளித்திருந்தது. இதன்படி கடந்த 2019-ம் ஆண்டி்ல் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. கடந்த 2019-ம் ஆண்டில் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. கடந்த 2020-ம் ஆண்டில் அங்கு பிரம்மாண்ட ராமர் கோயில் கட்ட பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
இரு வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் பொது சிவில் சட்டத்தையும் நிறைவேற்ற மத்தியில் ஆளும் பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியில் நேற்று கூறியதாவது: இந்திய அரசியலமைப்பு சாசனம் பொது சிவில் சட்டத்தை பரிந்துரைக்கிறது. மதச்சார்பற்ற நாடான இந்தியாவில் மதரீதியாக சட்டங்கள் இருக்கக்கூடாது. நாடாளுமன்றம், சட்டப்பேரவையில் இயற்றப்படும் சட்டம் அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்.
பாஜகவை தவிர வேறு எந்த கட்சியும் பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவாக இல்லை. எனவேஜனநாயகரீதியில் ஆக்கப்பூர்வமான விவாதம், ஆலோசனைகளை நடத்திய வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. விவாதம், ஆலோசனைகள் நிறைவு பெற்ற பிறகு பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும்.
பல்வேறு ஏற்றத்தாழ்வுகளை கடந்து இந்தியா உயர்ந்த நிலையை எட்டி உள்ளது. இப்போது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறோம். இது பின்னோக்கி பார்ப்பதற்கான நேரம் கிடையாது. முன்னோக்கி பார்த்து வளர்ச்சிப் பாதையில் அதிவேகமாக முன்னேறி செல்ல வேண்டும். அடுத்த 25 ஆண்டுகளில் 100-வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளோம். அப்போது உலகின் மிகப்பெரிய சக்தியாக இந்தியா உருவெடுக்கும்.
மத்தியில் ஆளும் பாஜக அரசின் 8 ஆண்டு கால ஆட்சியில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டு உள்ளன. ஊழல் அறவே ஒழிக்கப்பட்டு உள்ளது. நாடு வளர்ச்சிப் பாதையில் செல்கிறது. முதலீட்டுக்கு ஏற்ற சூழல் நிலவுகிறது. தீவிரவாதம் கட்டுப்படுத்தப்பட்டு அமைதி நிலை நாட்டப்பட்டு உள்ளது. உலகின் முதலீட்டு சந்தையாக மட்டுமல்லாமல் உலகின் உற்பத்தி மையமாகவும் இந்தியா உருவெடுத்து வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டத்தின்படி வரும் 2047-ம்ஆண்டில் வளர்ந்த நாடாக இந்தியா உருவெடுக்கும். சர்வதேச பொருளாதாரத்தில் 5-வது பெரிய நாடாக இந்தியா முன்னேறிஉள்ளது. சர்வதேச பொருளாதாரத்தில் தேக்க நிலை நீடிக்கும்போது இந்திய பொருளாதாரம் வேகமாக வளரும் என்று சர்வதேச செலாவணி நிதியம் கணித்துள்ளது. இவ்வாறு அமித் ஷா பேசினார்.