டேராடூன்: உத்தரகாண்டில் அரசு மருத்துவக் கல்லூரியில் சலுகை கட்டணத்தில் படிப்பவர்கள் குறிப்பிட்ட சில ஆண்டுகள் அரசு மருத்துவமனையில் பணி செய்ய வேண்டும். ஆனால், இவ்வாறு அரசு வேலையில் இருக்கும் மருத்துவர்கள் சிலர் முறையான தகவல் இல்லாமல் வேலைக்கு வருவதை நிறுத்திவிட்டு தனியார் மருத்துவமனைகளில் சேர்ந்து விடுகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக முறையான தகவல் எதுவும் வழங்காமல் தலைமறைவான 109 மருத்துவர்களை சுகாதாரத் துறை தேடி வருகிறது. அவர்கள் பெயரை கருப்புப் பட்டியலில் சேர்க்க இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த 109 மருத்துவர்கள் கடந்த சில ஆண்டுகளாக பணிக்கு வரவில்லை. தங்களை பற்றிய தற்போதைய விவரங்கள் எதையும் அதிகாரிகளுக்கு அவர்கள் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் அவர்களை அரசு வேலையிலிருந்து நீக்க சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது. இனி அவர்கள் அரசுத் துறையில் வேலைபெற முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.