நடிகர் சிம்புவின் மாநாடு மற்றும் வெந்து தணிந்தது காடு ஆகிய படங்கள் பாக்ஸ் ஆஃபீஸில் மெகா ஹிட் அடித்தன. வசூலில் ராஜபாட்டை நடத்திய இரு படங்களும், தோல்விகளாலும், விமர்சனங்களாலும் துவண்டு கிடந்த சிம்புவுக்கு புது தெம்பை கொடுத்திருகின்றன. இதனால் புது உற்சாகத்தில் இருக்கும் சிம்பு, அடுத்தடுத்து பல படங்கள் கமிட்டாக தொடங்கினார். இயக்குநர்கள் பலர் அவர் வீட்டுக்கு படையெடுக்க தொடங்கினர். சுதா கொங்கரா உள்ளிட்ட முன்னணி இயக்குநர்கள் கூட சிம்புவை வைத்து படம் இயக்க கதை தயார் செய்ததாக கூறப்படுகிறது.
ஆனால், சிம்பு 2 படங்களில் கிடைத்த வெற்றியால் தன்னுடைய சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்தியுள்ளாராம். அவருக்கு பல ஆண்டுகளுக்கு பின்னால் வந்த ஜூனியர் நடிகர்கள் எல்லாம் 25 சி சம்பளம் வாங்கிக் கொண்டிருப்பதால், தன்னுடைய சம்பளத்தை ஒரே அடியாக 30 சி-க்கு நெருக்கிவிட்டாராம். இதனால் ஆடிப்போன கோலிவுட் இயக்குநர்கள், அவரை வைத்து படம் இயக்க இருந்த ஆசையை தூக்கி தூர வைத்துவிட்டார்களாம். அவருடைய சம்பளமும், படத்திற்கான பட்ஜெட்டும் செட் ஆகாது என்பதால், வேறு நடிகரை பார்த்துக் கொள்ளலாம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டார்களாம்.
இப்போதைக்கு சிம்பு பத்து தல படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக, விண்ணைத் தாண்டி வருவாயா 2 உள்ளிட்ட படங்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக கோலிவுட்டில் காணாமல் போயிருந்த சிம்பு, இப்போது தான் கம்பேக் கொடுத்திருக்கிறார். இன்னும் 2 படங்கள் வரை காத்திருந்தால் என்ன? அதற்குள் சம்பளத்தை ஏற்றிவிட்டாரே என சிலர் கிசுகிசுக்கிறார்களாம்.
ஆனால் சிம்புவோ, இனிமேல் எனக்கான இடத்தை விடப்போவதில்லை என்பதை கறாராக இருக்கும் அவர், இருக்கும் படங்கள் எல்லாவற்றுக்கும் தரமான உழைப்பை தர தயாராக இருக்கிறேன், ஆனால், சம்பளத்தில் கை வைக்கக்கூடாது என்று விடாப்பிடியாக கூறிவிட்டாராம். இந்த தகவலைக் கேட்ட ரசிகர்கள், அடுத்தடுத்து சிம்புவின் படங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் மட்டுமே நிஜம் என்று கூறிக் கொள்கிறார்களாம்.