சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக லாலு மீண்டும் சிங்கப்பூர் பயணம்

பாட்னா: சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக லாலு பிரசாத் யாதவ், நேற்று மாலை சிங்கப்பூர் சென்றடைந்தார். ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும், பீகார் மாநில முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ், சிறுநீரகம் உள்ளிட்ட பல நோய்களால் அவதிபட்டு வருகிறார். கடந்த அக்டோபர்  மாதம் சிங்கப்பூர் சென்ற லாலு யாதவை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை  செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினர். முதற்கட்ட சிகிச்சை முடித்துக் கொண்டு மீண்டும் லாலு பீகார் திரும்பினார்.

சிங்கப்பூரில் வசிக்கும் அவரது இரண்டாவது மகள் ரோகினி ஆச்சார்யா, தனது ஒரு சிறுநீரகத்தை தந்தைக்கு தானமாக வழங்க முன்வந்தார். அதையடுத்து மருத்துவர்களின் ஆலோசனைபடி லாலு மீண்டும் சிங்கப்பூர் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை டெல்லியில் இருந்து புறப்பட்ட லாலு, சிங்கப்பூர் சென்றடைந்தார். அவருடன் அவரது மனைவி ராப்ரி தேவி, மகள் மிசா பார்தி மற்றும் அவரது கணவர் ஷைலேஷ் குமார் ஆகியோர் உள்ளனர். பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தனது தந்தையை வழியனுப்பி வைத்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.