5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 5 தோப்புக்கரணம் போடச்சொல்லி தண்டனை கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் நவாடா பகுதியில் உள்ள கிராமத்தில் 5 வயது சிறுமி ஒருவர் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அருண் பண்டிட் என்ற இளைஞர் சிறுமியிடம் சாக்லேட் வாங்கி தருவதாக கூறி கோழிப்பண்ணைக்கு அழைத்து சென்றுள்ளார்.
பின்னர் சிறுமியை அங்கே பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையடுத்து வீடு திரும்பிய சிறுமி தனது உடலில் வலி இருப்பதாக கூறி அழுதுள்ளார். பின்னர் பெற்றோர் கேட்டபோது, தனக்கு நேர்ந்ததை அழுது கொண்டே கூறியுள்ளார்.
அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனே அந்த கிராமத்தில் உள்ள பஞ்சாயத்தை நாடினர். அவர்களும் பஞ்சாயத்தை கூட்டி விசாரித்தனர். அப்போது பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் கூறுவதை கண்டுகொள்ளாமல், இதை பெரிதாக்க வேண்டாம் என்று கூறியுள்ளனர்.
பெற்றோரின் ஆறுதலுக்காக குற்றம் புரிந்த இளைஞரை தோப்புக்கரணம் போட சொல்லலாம் என கூறி, 5 தோப்புக்கரணத்தை தண்டனையாக விதித்துள்ளனர். பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் 5 தோப்புக்கரணம் போட்டுவிட்டு அமர்ந்தார்.
இந்த நிகழ்வு குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதைத்தொடர்ந்து பலரும் தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர். மேலும் முதலமைச்சரை டேக் செய்து சமூக வலைதளங்களில் கேள்விகளையும் எழுப்பினர்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றம் செய்தவர், குற்றத்தை மூடி மறைக்க முயன்றவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
newstm.in