'அதிமுகவின் கடைசி 4 ஆண்டு கால ஆட்சி தமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட ஒரு மிகப் பெரிய பேரிடர்' – முதல்வர் ஸ்டாலின் 

சென்னை: 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் கடைசி நான்கு ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சியை தமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட ஒரு மிகப் பெரிய பேரிடர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை, மாமல்லபுரத்தில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ” உழைப்பவர்களுக்கு அதற்குரிய வாய்ப்பு உண்டு என்பதற்கு சுந்தரைப் போன்றவர்கள் இந்தக் கழகத்தில் ஏராளமாக இருக்கிறார்கள். பதவி வரும், போகும். கழகம்தான் நம்முடைய அடையாளம்.

நம்முடைய இயக்கம். நம்முடைய உயிர் மூச்சு. அப்படிப்பட்ட இயக்கத்தை உயிர் மூச்சாக கருதி நம்முடைய சுந்தர் போன்றவர்கள் காத்து வருவதால்தான், பத்தாண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் 6-ஆவது முறையாக அதுவும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையில் இன்றைக்கு ஆட்சியை, அதுவும் திராவிட மாடல் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம் என்று சொன்னால், சுந்தர் போன்றவர்களுடைய உழைப்பால்தான் இன்றைக்கு இந்தக் கழகம் பீடுநடை போட்டுக் கொண்டிருக்கிறது.

அதுவும் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் பாழாகிப்போன நிதிநிலைமையை சீர்செய்து, பல்வேறு திட்டங்களையெல்லாம் இன்றைக்கு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். 10 ஆண்டுகால அதிமுக ஆட்சி முழுவதையும் சீரழிவு என்று சொல்லிவிட முடியாது. முதல் ஆறு ஆண்டுகள் சீரழிவு, கடைசி நான்கு ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சியை தமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட ஒரு மிகப் பெரிய பேரிடர் என்றுதான் நாம் சொல்ல வேண்டும். அந்தப் பேரிடரை போர்க்கால அடிப்படையில் சீர்செய்யும் பணியைத் தான் இன்றைக்கு நம்முடைய அரசு, திராவிட மாடல் அரசு செய்து வருகிறது.

பேரறிஞர் அண்ணா தலைமையில், தலைவர் கருணாநிதி தலைமையில் நம்முடைய கழகம் ஆட்சிக்கு வருகிற போதெல்லாம், தமிழ்நாடு புத்துணர்ச்சியும், புத்தெழுச்சியும் பெறக்கூடிய மாநிலமாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது. அதேபோல, இப்போதும் மீண்டும் தமிழ்நாடு தலை நிமிர்ந்து நடைபோடுகிறது.

இந்த சுயமரியாதைத் திருமணத்தைப் பற்றி நம்முடைய பொதுச் செயலாளர் பேசுகிறபோது குறிப்பிட்டுச் சொன்னார். ஆம், ஏற்கனவே 1967-க்கு முன்னால் இப்படிப்பட்ட திருமணங்கள், சீர்திருத்தத் திருமணங்கள், சுயமரியாதை உணர்வோடு நடைபெறக்கூடிய திருமணங்கள் நடைபெறுகிறது என்று சொன்னால், அதை கேலி செய்தவர்கள், கிண்டல் செய்தவர்கள், விமர்சனம் செய்தவர்களெல்லாம் நாட்டில் உண்டு. ஆனால் இன்றைக்கு, சீர்திருத்தத் திருமணம் நடக்கிறதென்றால் யாரும் ஆச்சரியப்படுவதில்லை. அந்த அளவிற்கு இன்றைக்கு பிரபலமாக சீர்திருத்தத் திருமணங்கள் நடந்து கொண்டிருக்கிறது.

1967ம் ஆண்டு முதன்முதலில் தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி பொறுப்பேற்றபோது, அறிஞர் அண்ணா முதலமைச்சராக பொறுப்பேற்றபோது, சட்டமன்றத்திற்குள் நுழைந்து மூன்று தீர்மானங்களைக் கொண்டுவந்து ஏகமனதாக நிறைவேற்றித் தந்தார் என்று சொன்னால், அந்த மூன்றில் ஒன்று தான் சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற அந்த அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தார். இது சீர்திருத்தத் திருமணம் மட்டுமல்ல, சுயமரியாதை உணர்வோடு நடைபெறக்கூடிய திருமணமாக மட்டுமல்ல, இது நம்முடைய தாய் தமிழாம் தமிழ்த் திருமணம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

அப்படிப்பட்ட தமிழ் மொழிக்கு, செம்மொழி என்கிற அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்தவர் நம்முடைய தலைவர் கருணாநிதி. அப்படிப்பட்ட இந்த அழகான தமிழ் மொழியில் நடைபெறக்கூடிய இந்தத் திருமணத்தில் உங்களோடு சேர்ந்து நானும் கலந்துகொண்டு, மணமக்களை மனதார வாழ்த்துகிறேன், போற்றுகிறேன், எல்லா நன்மைகளையும் பெற்று சிறப்போடு வாழ்ந்திட வேண்டும்.

புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லியிருக்கக்கூடிய வீட்டுக்கு விளக்காய் நாட்டிற்கு தொண்டர்களாய் மணமக்கள் வாழ்க! வாழ்க! வாழ்க! என்று வாழ்த்தி, அதே நேரத்தில், சுந்தர் ஆற்றக்கூடிய பணிகளை என்னால் நிச்சயமாக மறக்கவும் முடியாது, மறுக்கவும் முடியாது. இந்த இயக்கத்திற்கு அவர் ஆற்றக்கூடிய அந்தப் பணிகள் மேலும், மேலும் வளரவேண்டும் என்ற அந்த உணர்வோடு தான், நான் மணமக்களை வாழ்த்துகிறேன், வாழ்த்துகிறேன் என்று சொல்லி, மணமக்கள் வாழ்க! வாழ்க! வாழ்க! என்று கூறி விடைபெறுகிறேன்.” இவ்வாறு முதல்வர் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.