வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து திடீரென பண்ட் விடுவிப்பு – பிசிசிஐ

மிர்புர்,

இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக வங்காளதேசம் சென்றுள்ளது. இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மிர்புரில் இன்று நடைபெற்று வருகிறது.

அண்மையில் நடந்த நியூசிலாந்து தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்த கேப்டன் ரோகித் சர்மா, விராட்கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோர் இந்திய அணிக்கு திரும்பி இருக்கின்றனர். முன்னணி வீரர்கள் திரும்பி இருப்பதால் அணி மேலும் வலுப்பெற்று இருக்கிறது.

இந்நிலையில் இன்று நடைபெற்று கொண்டிருக்கும் ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ஒருநாள் தொடரிலிருந்து விலகுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. தற்போது சிறப்பான பார்மில் இல்லாத பண்டுக்கு பதிலாக சஞ்சு சாம்சனுக்கு அணியில் இடம் கொடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விடுவிக்கப்பட்ட பண்ட் அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு திரும்புவார் என கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிசிசிஐ கூறியதாவது,

“பிசிசிஐ மருத்துவக் குழுவுடன் ஆலோசித்து, ரிஷப் பந்த் ஒருநாள் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் டெஸ்ட் தொடருக்கு முன்னதாக அணியில் இணைவார். மாற்று இடம் சேர்க்கப்படவில்லை ” என்று பிசிசிஐ அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மாற்று வீரர் சேர்க்கப்படாத காரணத்தால் விக்கெட் கீப்பிங் பணியை கே.எல். ராகுல் செய்ய உள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.