இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கடந்த நவம்பர் 24-ம் தேதி அசிம் முனீர் புதிய ராணுவ தளபதியாக பொறுப்பேற்றார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று அவர் சர்ச்சைக்குரிய பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குச் சென்று அங்குள்ள ராணுவ வீரர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
அப்போது அவர் பேசுகையில், “கில்ஜித் பல்திஸ்தான், ஜம்மு, காஷ்மீர் குறித்து இந்தியா பொறுப்பற்ற கருத்துகளை தெரிவித்து வருகிறது. நம் தாய் நிலத்தில் ஒரு அங்குலத்தைக் கூட இந்தியா அபகரிக்க முடியாது. இந்தியா நம் மீது போர் தொடுத்தால் அதை எதிர்கொள்ளவும் பதில் தாக்குதல் நடத்தவும் நமது ராணுவம் முழு தயார் நிலையில் உள்ளது” என்று தெரிவித்தார். மேலும், பாகிஸ்தான் ராணுவ வீரர்களின் உறுதியையும், கடமை உணர்வையும், நிபுணத்துவத்தையும் அவர் பராட்டினார்.
கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியா ஜம்மு – காஷ்மீர் மீதான சிறப்பு அந்தஸ்தை நீக்கியது. இந்தப் பிராந்தியங்கள் இந்தியாவுடன்தான் இருக்கும்” என்று இந்தியா தெரிவித்தது. இதை சர்வதேச அளவில் பிரச்சினையாக்க பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது.
இதற்கிடையில், இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதிகளை மீட்பது குறித்து மத்திய அரசு தொடர்ந்து கருத்துகள் தெரிவித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவுக்கு எச்சரிக்கை விடும் வகையில் பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் பேசி உள்ளார்.