தெஹ்ரான்: ஈரானில் மரண தண்டனைகள் நிறைவேற்றி வருவது அதிகரித்துள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன.
ஈரான் சமீபத்தில் இஸ்ரேல் உளவுத் துறையுடன் இணைந்து பணியாற்றிய ஈரானைச் சேர்ந்த நான்கு பேருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து ஈரான் நீதித் துறை இணையதள பக்கத்தில், “இஸ்ரேலின் உளவுத் துறையுடன் இணைந்து பணி செய்த நால்வர் மே மாதம் கைது செய்யப்பட்டனர். நால்வருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்த மூவருக்கு சிறைத் தண்டனை (5 – 10 ஆண்டுகள்) விதிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சீனாவைத் தவிர்த்து மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டால், ஈரானில் அதிகப்படியான மரண தண்டனைகள் நிறைவேற்றப்படுவதாகவும், சமீபத்தில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட 20 பேருக்கு ஈரான் அரசு தூக்குத் தண்டனை வழங்கி உள்ளது என்றும் ஈரான் மனித உரிமைகள் அமைப்பு (Iran Human Rights (IHR) ) குற்றம் சுமத்தியுள்ளது.
ஈரானில் இதுபோன்ற மரண தண்டனைகள் இன, மத சிறுபான்மையினரான வடமேற்கில் உள்ள குர்தூஸ், தென்மேற்கில் உள்ள அரபுகள் மற்றும் தென் கிழக்கில் உள்ள பாலுச் இனத்தவரை குறிவைத்தே நடத்தப்படுவதாகவும் கூறப்படுகின்றது. 2021-ல் மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டவர்களில் 21% பேர் ஈரானில் உள்ள பாலுச் சிறுபான்மையினர் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2021-ல் ஈரானில் மொத்தம் 333 மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன. இது அதற்கு முந்தைய ஆண்டைவிட 25% அதிகம்.