உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முதல் பெண் சோப்தாராக லலிதா என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
உயர் நீதிமன்ற நீதிபதிகள் தங்களது சேம்பரில் இருந்து நீதிமன்ற அறைக்குச் செல்லும்போது அவர்களுக்கு முன்பாக ‘சோப்தார்’ எனப்படும் உதவியாளர்கள் வெள்ளைநிற சீருடை மற்றும் சிவப்பு நிற தலைப்பாகை அணிந்து, மரியாதை நிமித்தமாகவும், நீதிபதிகளின் வருகையை உணர்த்தும் விதமாகவும் செங்கோலை ஏந்தியபடி முன்னே செல்வர்.
அந்த நேரத்தில், வழக்கறிஞர்கள், அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட எல்லோருமே நீதிபதிக்கு வழிவிட்டு, ஓரமாக நின்று வணக்கம் தெரிவிப்பது மரபாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. வெள்ளி செங்கோல் நீதிபதியின் அறைக்கு முன்பு வைக்கப்பட்டிருந்தால், அந்த அறையின் உள்ளே நீதிபதி இருக்கிறார் என்று அர்த்தம்.
வெள்ளை நிறச் சீருடையுடன், தேசிய சின்னம் பொறிக்கப்பட்ட சிவப்பு நிற தலைப்பாகை, வயிற்றுப் பகுதியில் சிவப்பு நிற பட்டையை சோப்தார் அணிந்திருப்பார். நீதிபதியின் உதவியாளராகக் கருதப்படும் சோப்தார், பணி முடிந்து திரும்பும்வரை நீதிபதி இருக்கும் இடத்திலேயே இருப்பார். இதுவரை, ஆண்கள் மட்டும்தான் சோப்தார்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முதல் பெண் சோப்தாராக மதுரையை சேர்ந்த லலிதா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், நீதிபதி மாலாவுக்கு சோப்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.