கார்த்திகை தீப திருவிழா – திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் பல்வேறு விழாக்கள் நடைபெற்றாலும் கார்த்திகை மாதத்தில் வரும் தீப திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இக்கோயிலுக்கு பின்புறம் உள்ள 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலையை பக்தர்கள் அண்ணாமலை என்று பெயர் சூட்டி சிவனாக வணங்கி வருகின்றனர். பௌர்ணமி மற்றும் கார்த்திகை தீபத்திருவிழா நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் தூரம் கிரிவலம் செல்வார்கள். 

இந்தச் சூழலில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் டிசம்பர் 6ஆம் தேதி (இன்று) திருக்கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்பட உள்ளது. கடந்த நவம்பர் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இவ்விழாவின், முக்கிய நிகழ்வாக டிசம்பர் 6ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு, அண்ணாமலையார் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படும். 

அதன்படி,  இன்று அதிகாலை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் வளாகத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதில், அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

இதைத் தொடர்ந்து இன்று மாலையில் பஞ்சமூர்த்திகள் தரிசனம்,அர்த்தநாரீஸ்வரர் தரிசனத்தை தொடர்ந்து, கோயிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயர மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். மகா தீபத்தன்று மலையில் ஏற 2500 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் 30 முதல் 40 லட்சம் பக்தர்கள் கலந்துகொள்ள உள்ளனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு  திருவண்ணாமலைக்கு தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சிறப்பு ரயில்களும், பேருந்துகளும் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.