குஜராத் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.
பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்தில் கடந்த சில வாரங்களாக தேர்தல் திருவிழா களை கட்டியிருந்தது. மாநிலத்தின் 182 தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடந்தது. அந்தவகையில் 89 தொகுதிகளுக்கு கடந்த 1-ந்தேதியும், மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு 5-ந்தேதியும் வாக்குப்பதிவு நடந்தது.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன. வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்குகின்றன. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டு உள்ள 37 வாக்கு எண்ணும் மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்கள் திறக்கப்பட்டு வாக்குகள் எண்ணி முடிவுகள் வெளியிடப்படும். இதனால் தேர்தல் முடிவுகள் நண்பகல் முதல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குஜராத்தில் இந்த முறை புதிய வரவாக மாறியிருக்கும் ஆம் ஆத்மி கட்சியால் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியது. சுமார் 70 கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் 624 சுயேச்சைகள் என 1,621 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களது அரசியல் எதிர்காலம் இன்று தெரியவரும்.
மாநிலத்தில் ஆட்சியமைக்க 92 உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும் என்ற நிலையில், பாரதிய ஜனதா கட்சி 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதனால் கட்சியினர் மத்தியில் பெரும் மகிழ்ச்சி கரைபுரண்டோடுகிறது. இந்த மகிழ்ச்சி நிலைபெறுமா? என்பது இன்று தெரியவரும்.
newstm.in