கடந்த அக்டோபர் மாதம் முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிககனமழை வரை பெய்து வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக நள்ளிரவு புயலாக வலுப்பெற்றுள்ளது. இதற்கு ‘மாண்டஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த புயல் தற்போது காரைக்காலில் இருந்து 560 கி.மீ. தூரத்திலும், சென்னையில் இருந்து 640 கி.மீ. தூரத்திலும் மையம் கொண்டுள்ளதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மாண்டஸ் புயல் மணிக்கு 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதால், அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயலை தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.