மாண்டஸ் புயல் உருவாகிடுச்சு… கிட்ட நெருங்கி வருது… அடுத்து நடக்கப் போவது என்ன?

மாண்டஸ் புயல் உருவாகிவிட்டது. இனிமேல் கனமழை வெளுத்து வாங்கப் போகிறது என்ற செய்தி தான் தீயாய் பரவி கொண்டிருக்கிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, நேற்று இரவு தென்மேற்கு வங்கக்கடலில் திருகோணமலையில் இருந்து 410 கிலோமீட்டர் தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டிருந்தது.

மாண்டஸ் புயல் உருவாகிவிட்டது

இது படிப்படியாக மேற்கு – வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருவதாகவும், விரைவில் புயலாக மாறக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது. வரும் 10ஆம் தேதி வட தமிழகம், புதுச்சேரி மற்றும் புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டா இடையிலான ஆந்திர கடலோரப் பகுதியில் புயல் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலில் புயல் உருவாகிவிட்டது.

புதையல் பெட்டி எங்கிருக்கிறது?

இதற்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து தழுவி வந்த “மாண்டஸ்” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் “புதையல் பெட்டி” ஆகும். மாண்டஸ் புயல் உருவாகி விட்டதால் வட தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு மஞ்சள் அலர்ட் விடப்பட்டுள்ளது. எனவே கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து 07.12.2022 இரவு 11.30 மணியளவில் மாண்டஸ் புயலாக வலுவடைந்துள்ளது.

நள்ளிரவில் கரையை கடக்கிறது

இது காரைக்காலில் இருந்து 560 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 640 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. மேலும் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியில் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையில் வரும் 9ஆம் தேதி நள்ளிரவில் கரையை கடக்கக்கூடும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

அப்போது மணிக்கு 65 முதல் 75 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். அதிகபட்சமாக 85 கிலோமீட்டர் வேகம் வரை காற்று வீசும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கையில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்புமாறு பேரிடர் மேலாண்மை துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. புயல் எச்சரிக்கையை தொடர்ந்து 10 மாவட்டங்களில் தேசிய பேரிடர் குழுவினர் தயார் நிலையில் இருக்கின்றனர்.

பள்ளிகளுக்கு விடுமுறை

இந்நிலையில் கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.