இரண்டாவது முறை உடலுறவுக்கு ஒத்துழைக்காத மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த கணவனையும், உடந்தையாக இருந்த அவருடைய சகோதரனையும் போலீசார் கைது செய்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரொஹா மாவட்டத்தை சேர்ந்தவர் முகமது அன்வர் (34). இவருடைய மனைவி ருக்ஷர் (30). கடந்த 2013-ம் ஆண்டு திருமணமான இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். அம்ரொஹாவில் குடும்பத்துடன் வசித்து வரும் அன்வர், தனது வீட்டின் கீழ் தளத்தில் சொந்தமாக பேக்கரி வைத்துள்ளார்.
இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை இரவு அன்வர் தனது மனைவி ருக்ஷருடன் பாலியல் உறவு கொண்டுள்ளார். உறவுக்கு பின்னர் ருக்ஷர் அசதியில் உறங்கியுள்ளார். அப்போது, மீண்டும் உறவுக்கு வருமாறு ருக்ஷரை அன்வர் அழைத்துள்ளார். அதற்கு ருக்ஷர் முடியாது என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அன்வர், தனது மனைவியின் கழுத்தை கயிற்றால் நெரித்து கொலை செய்துள்ளார். இதையடுத்து, அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக கொலை செய்த தனது மனைவியின் தலை முடியை வெட்டியுள்ளார். பின்னர், உடலை பிளாஸ்டிக் கவரில் கட்டி தனது கிராமத்தில் இருந்து 50 கிலோமீட்டர் தொலையில் உள்ள ரதுபுரா என்ற கிராமத்தில் சென்று வீசியுள்ளார்.
அதன் பின்னர், தனது மனைவியை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்துள்ளார். அன்வர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தபோது, ரதுபுரா கிராமத்தில் அடையாளம் தெரியாத பெண் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சென்று பார்த்தபோது, அந்தப் பெண் அன்வரின் மனைவி ருக்ஷர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார், அன்வரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ஒரே இரவில் இரண்டு முறை உறவுக்கு வர மறுத்ததால் மனைவியை கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக அன்வர் ஒப்புக்கொண்டார். மேலும், இந்த கொலைக்கு அன்வரின் சகோதரன் டேனிஷ் என்பவரும் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அன்வர் மற்றும் டேனிஷை போலீசார் கைது செய்தனர்.