தமிழகத்தில் 1998 பிறகு புதிதாக ஆவண எழுத்தர் உரிமங்கள் வழங்கப்படவில்லை. பதிவுக்கு வரும் ஆவணங்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதால் கூடுதல் ஆவண எழுத்தர்களை நியமிக்க வேண்டிய நிலை எழுந்துள்ளதை கருத்தில் கொண்டு உரிய அமைப்பு மூலம் சிறப்பு பொது தேர்வு நடத்தப்பட்டு ஆவண எழுத்தர்களுக்கான புதிய உரிமம் வழங்கப்படும்.
இதன் மூலம் ஏறத்தாழ 20 ஆயிரம் பேர் பயன் பெறுவர். பதிவுத்துறை அமைச்சரின் அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் பதிவுத்துறை தலைவரின் கருத்தை ஏற்று புதிய ஆவண எழுத்தர் உரிமங்களை வழங்க பதிவு துறை தலைவருக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
ஆவண எழுத்தர் உரிமம் வழங்குவதற்காக நடத்தப்பட வேண்டிய சிறப்பு பொது தேர்வு சில நடைமுறைகளை பின்பற்றி நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி “ஆவண எழுத்தர் உரிமத்திற்கான தகுதி தேர்வினை தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியை கருத்தில் கொண்டு எளிய வகையில் மாநிலம் முழுவதும் ஒரே தேர்வாக நடைபெறும். நடத்தப்படும் தேர்வு வழிமுறைகளை பதிவுத்துறை தலைவரே முடிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இத்தேர்வை அரசு சார்ந்த அமைப்புகள் மூலம் நடத்திக் கொள்ளவும், தேர்வு நடத்தி தரும் அமைப்பு கேட்கும் கட்டணங்களின் அடிப்படையில் தேர்வுக்கான விண்ணப்ப கட்டணம் நிர்ணயிக்கவும் பதிவுத்துறை தலைவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆவண எழுத்தர் உரிமத்திற்கான தகுதி தேர்வு நடத்த மேற்கொள்ளப்படும் அனைத்து செலவினங்களும் விண்ணப்ப கட்டணமாக பெறப்படும் தொகையிலிருந்து செய்யப்பட வேண்டும். தேர்வுக்கான கேள்வித்தாள்கள் மற்றும் அதற்கான விடைகளை பதிவு துறை அலுவலர்களின் ஆலோசனையின் அடிப்படையில் தேர்வு நடத்தும் அமைப்பே தயாரித்துக் கொள்ளலாம். ஆவண எழுத்தர் உரிமத்திற்கான தேர்வு நடத்துவது தொடர்பாகவும் தொழில்நுட்ப தகுதி தொடர்பாகவும் தமிழ்நாடு ஆவண எழுத்தர் உரிமை விதிகள் 1982ல் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டி இருப்பின் அதற்கான உரிய கருத்துருக்களை அரசுக்கு அனுப்பி அரசின் உரிய அனுமதி ஆணை பெற வேண்டும் என பதிவுத்துறை தலைவர் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
மேலும் நகல் எடுத்தர் உரிமம் பெறுவதற்கான அதிகபட்ச வயது வரம்பு 55 எனவும், ஆவண எழுத்தர் உரிமம் பெற பட்டியல் மற்றும் பழங்குடியினர் வகுப்பினருக்கான அதிகபட்ச வயது வரம்பு 35 எனவும், இதர வகுப்பினருக்கான அதிகபட்ச வயது வரம்பு 32 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியுடன் ஆவண எழுத்தர் உரிமங்களுக்கான தகுதி தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு ஆவண எழுத்தர் உரிமம் விதி 12 இன் படி 5 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் உரிமம் வழங்கப்படும்” என பதிவுத்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.