சேலம் அரசு மருத்துவக் கல்லூரி நுழைவு வாயில் பகுதி ஆக்கமிரப்பை இரு வாரங்களில் அகற்ற ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நுழைவு வாயிலில் உள்ள ஆக்கிரமிப்பை 2 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என சேலம் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், சேலத்தை சேர்ந்த ஏ.ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில், “சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் வடக்கு நுழைவுவாயில் பகுதியை ஆக்கிரமித்து சண்முகம் என்பவர் மரக்கடை வைத்துள்ளார். மருத்துவமனையிலிருந்து பிரேத பரிசோதனை செய்யப்பட்ட உடல்கள் கொண்டுவரும் நுழைவுவாயிலில் உள்ள இந்த ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் 2017-ம் ஆண்டே உத்தரவிட்டும், அந்த கூட்டம் நடத்தப்படவில்லை.

இந்த ஆக்கிரமிப்பை அகற்ற கோரி கடந்த 2020-ம் ஆண்டு தமிழ்நாடு வருவாய்த் துறை செயலாளர், சுகாதாரத் துறை செயலாளர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு மனு அளித்தேன். அதன் அடிப்படையில் ஆய்வுகளை மேற்கொள்ள மாநகராட்சி மற்றும் காவல் ஆணையர்களுக்கு அரசு உத்தரவிட்டும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே மருத்துவமனையின் வடக்கு நுழைவுவாயிலில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார்.

இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், 2 வாரத்துக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றி, அறிக்கை தாக்கல் செய்ய சேலம் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.