ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து சாப்பிடுவதில் 7வது ஆண்டாக பிரியாணி முதலிடம்: இந்தியர்களின் உணவு பட்டியலில் முன்னிலை

புதுடெல்லி: இந்தியாவில் தொடர்ந்து 7வது ஆண்டாக ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து சாப்பிடும் உணவில் பிரியாணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளதாக ஆன்லைன் உணவு சப்ளை நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆன்லைனில் உணவு பொருட்களை ஆர்டர் செய்து சாப்பிடும் பழக்கம்  நகர்புறங்களில் மட்டுமின்றி கிராமப் புறங்களிலும் வேகமாக பரவி வருகிறது.  

பிரபல ஆன்லைன் உணவு சப்ளை நிறுவனங்கள், இந்தியாவில் 10,000க்கும்  மேற்பட்ட புதிய உணவகங்களுடன் ஒப்பந்தம் செய்து உணவு சப்ளை செய்து  வருகின்றன. அந்த வகையில் குறிப்பிட்ட எந்த உணவுகளை மக்கள் அதிகமாக ஆர்டர் செய்து சாப்பிடுகின்றனர் என்று கணக்கிட்டதில், பிரியாணி முதலிடம் பெற்றுள்ளது. இந்தாண்டு மட்டுமின்றி தொடர்ந்து 7வது ஆண்டாக பிரியாணியே முதலிடத்தில் உள்ளது.

குறிப்பிட்ட உணவு சப்ளை நிறுவனத்திடம் மட்டும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 137 பிரியாணி ஆர்டர் புக் செய்யப்பட்டுள்ளது. அதே கடந்தாண்டு சராசரியாக நிமிடத்திற்கு 115 பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டது. இந்தியர்களின் மிகவும் விருப்பமான உணவு பட்டினியில் பிரியாணி இடம்பிடித்துள்ளது.

இதைத் தொடர்ந்து மசாலா தோசை, சமோசாக்கள், மெக்சிகன் பவுல், இத்தாலிய பாஸ்தா போன்ற வெளிநாட்டு உணவுகளுக்கான ஆர்டர்களும் அதிகரித்துள்ளன. இனிப்பு வகை உணவுகளும் அதிக அளவில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன என்று அந்த நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.