“முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் சொத்து விவரங்கள் ஏப்ரலில் வெளியிடப்படும்" – அண்ணாமலை

திருப்பூர் கோவில்வழியில் பாஜக சார்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பேசுகையில், “திமுகவுக்கு மாற்று பாஜகதான் என்று தமிழக மக்கள் முடிவெடுத்துவிட்டனர். 2024-இல் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி 400 உறுப்பினர்களுடன் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பார். நான் கட்டியுள்ள கை கடிகாரத்துக்கான பில்லை வெளியிட முடியுமா என்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கேட்கிறார். இந்த கடிகாரத்தை எங்கிருந்து வாங்கினேன்? எவ்வளவு பணம் கொடுத்தேன்? என்ற அனைத்து விவரங்களையும் பொதுவெளியில் வெளியிட உள்ளேன்.

அண்ணாமலை

ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களைப் பார்த்துதான் மக்கள் கேள்வி கேட்பதுவழக்கம். ஆனால், அமைச்சர் செந்தில்பாலாஜி சாமானியனான என்னைப் பார்த்து கடிகாரத்துக்கு பில் கேட்கிறார். என்ன வேண்டுமானாலும் பேசலாம், எழுதலாம். கேட்க யாருமில்லை என்ற மமதை திமுக அமைச்சர்களிடம் ஏற்பட்டுள்ளது.

கை கடிகாரத்துக்கு மட்டுமல்ல. காவல் துறையில் 2010-இல் சேர்ந்ததில் இருந்து 13 ஆண்டுகள் நான் சம்பாதித்த அனைத்தையும் பொதுவெளியில் வெளியிட தயாராக உள்ளேன். எனது அனைத்து வங்கிக் கணக்குகள், சம்பளமாக பெற்ற சுமார் ரூ.1 கோடியை எவ்வாறு செலவு செய்தேன். ரூ.25 லட்சம் கட்டிய கிரெடிட் கார்டு பில் என மாதவாரியாக அனைத்து விவரங்களையும், அதற்கென பிரத்யேக உருவாக்கப்பட்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உள்ளேன். அதை யார் வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம்.

அண்ணாமலை

ஆனால், திமுகவில் ஒரு வட்டத் தலைவர் தனது சொத்து விவரங்களை வெளியிட தயாராக உள்ளாரா? முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரின் குடும்ப உறுப்பினர்கள், பினாமிகள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆகியோரின் சொத்துப் பட்டியலை ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியிட உள்ளேன்.

இதுவரை முதல்வர் உள்பட 13 அமைச்சர்களின் ரூ. 2 லட்சம் கோடி மதிப்பிலான சொத்து விவரங்களை சேகரித்துள்ளேன். மு.க.ஸ்டாலின் தொடங்கி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் வரை சொத்து விவரங்கள், இந்தோனேசியாவில் திமுக அமைச்சர் ஒருவருக்கு சொந்தமான துறைமுகம் ஆகிய விவரங்களை தனித்தனியாக வெளியிட உள்ளேன்.

அமைச்சர் உதயநிதி லெக்சஸ் கார் வாங்கியபோது, அதற்கு வரி செலுத்தாமல் இந்தியாவுக்குள் ஏமாற்றி கொண்டு வந்ததை கண்டறிந்து சிபிஐ வழக்குத் தொடர்ந்தது. இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின், உதயநிதிக்கு எதிராக கொடுக்கப்பட்ட சாட்சி விவரங்களையும் ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியிடுவேன்.

உதயநிதி – ஸ்டாலின்

70 ஆண்டுகளாக பொறுத்துக் கொண்டிருந்தோம். தற்போது பூனைக்கு மணி கட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது. தமிழகத்தில் ஊழலை ஒழிக்காமல் அடுத்த அடி எடுத்து வைத்து எந்தப் பயனும் இல்லை. அதை இங்குள்ள கட்சிகள் கேட்க மாட்டார்கள். ஏனென்றால், அவர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன.

ஆனால், எங்கள் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லாததால் திமுகவை எதிர்த்து துணிச்சலாக கேள்வி கேட்கிறோம். முதல்வரின் மருமகன் சபரீசன் கட்டியுள்ள கை கடிகாரத்தின் மதிப்பு ரூ.14 கோடியாகும். அது எங்கிருந்து வந்தது? மு.க.ஸ்டாலினின் குடும்பத்தினர் பயன்படுத்தும் கார்கள், முதல்வர் முன்பு என்னென்ன கடிகாரம் கட்டினார்? என்ன பொருள்களைப் பயன்படுத்தினார் என்ற அனைத்து விவரங்களும் வெளியிடப்படும்.

டி.ஆர்.பாலு

திமுக எம்.பி. டி.ஆர்.பாலுக்கு எத்தனை சாராய ஆலைகள் உள்ளன. அதன் சொத்து மதிப்பு, அவரின் ஆலையில் இருந்து மாதமாதம் டாஸ்மாக் கடைகளுக்கு எவ்வளவு மது பாட்டில்கள் விற்பனைக்கு செல்கின்றன என்ற அனைத்து தகவல்களும் ஏப்ரல் மாத அறிக்கையில் இடம்பெறும். அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான அமலாக்கப் பிரிவு தொடர்ந்துள்ள வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

அவர் சார்பில் ஆஜராகும் மூத்த வழக்குரைஞர்களுக்கு ஒருமுறைக்கு ரூ.25 லட்சம் கொடுக்கப்படுகிறது. இந்தப் பணம் எங்கிருந்து வந்தது. யாருடையது? இதுவரை அந்த வழக்குரைஞர் எத்தனை முறை ஆஜராகி உள்ளார். அதற்கான செலவு, கரூரைச் சுற்றி 650 ஏக்கர் பரப்பளவில் அவர் வாங்கி குவித்துள்ள நிலங்களின் விவரம் அனைத்தும் வெளியிட உள்ளேன்.

முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் கட்டிய கை கடிகாரத்தில் வைரங்கள் இருப்பதாகவும், ஒட்டுக்கேட்கும் கருவி இருப்பதாக திமுகவினர் புரளியை கிளப்பினர். அதேபோல், தற்போது, என் கடிகாரத்தை வைத்து அரசியல் செய்கின்றனர்.

செந்தில் பாலாஜி – அண்ணாமலை

திமுகவினருக்கு சொந்தமான சாராய ஆலைகளில் இருந்து 60 சதவீத மது பாட்டில்களை டாஸ்மாக் நிறுவனம் கொள்முதல் செய்கிறது. நிலைமை இப்படி உள்ளபோது, எவ்வாறு திமுக மதுக் கடைகளை மூடும் என்று தெரியவில்லை. அடுத்த ஒன்றரை ஆண்டில் ரூ.50 ஆயிரம் கோடியாக டாஸ்மாக் வருமானம் உயர்ந்துவிடும். ஏழைகளின் பணத்தை மதுக்கடைகள் மூலம் அரசே திரும்பி எடுத்துக் கொண்டால், அவர்களின் வாழ்வாதாரம் எப்படி உயரும். இதுதான் திராவிட மாடலா?

திமுகவினரின் ஊழல் குறித்து எதுவும் கேட்காமல் விட்டதன் விளைவு, இன்றைக்கு இந்தியாவில் ஊழலில் முதன்மை மாநிலமாக தமிழகம் மாறி உள்ளது. தமிழகத்தில் 30 சதவீத கமிஷன் இல்லாமல் எந்த வேலையும் நடைபெறாது என்ற நிலை உள்ளது. அமைச்சர்கள் மு.க.ஸ்டாலின் குடும்பத்துக்கு அடிமையாக இருப்பதற்கு தயாராக உள்ளாரகள். அதற்காக தமிழக மக்களையும் அடிமையாக மாற்ற நினைப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

அண்ணாமலை-ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வந்தபிறகு பால் விலையை ஏற்றிவிட்டு அதன் மூலம் வருமானம் அதிகரிப்பதாக முதல்வர் கூறுவது கேலிக்கூத்தாக உள்ளது. சாதாரண மனிதனின் நிலை என்ன என்று முதல்வருக்கு தெரியவில்லை. மக்களிடம் பொய் சொல்லி 18 மாதங்களை ஓட்டிவிட்டனர். வரும் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று மு.க.ஸ்டாலினை துணை பிரதமர் ஆக்கிவிட்டு, உதயநிதியை முதல்வராக ஆக்கிவிடலாம் என குடும்ப உறுப்பினர்கள் நினைக்கிறார்கள்.

மகன் உதயநிதி சிறந்த அமைச்சர் என்று பெயர் எடுக்க பதவியேற்புக்கு முன்பாக இரண்டு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை செயலர்களாக மு.க.ஸ்டாலின் நியமத்துள்ளார். உதயநிதிக்கு சரக்கு இருக்கிறதா இல்லையா என்பதை இரண்டு வருடங்களில் மக்கள் பார்க்கத்தான் போகிறார்கள்” என்றார்.

அமைச்சர் உதயநிதி

இதைத் தொடர்ந்து, அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசுகையில், “திமுக எங்களை தொட்டுவிட்டது. அவர்கள் ஆரம்பித்தார்கள், நாங்கள் முடிவுரையை எழுத உள்ளோம். திமுகவின் ஊழல்களை மக்கள் மன்றத்துக்கு கொண்டுவர பாஜக சார்பில் ஒரு மாதத்தில் இலவச தொலைபேசி எண், இணையதளம்,செல்போன் ஆப் உருவாக்க உள்ளோம்.

அதில், திமுகவினரின் சொத்து விவரத்தை பொதுமக்களே இணையதளம், செல்போன் ஆப் அல்லது இலவச தொலைபேசி எண் வழியாக தெரிவிக்கலாம். தொடர்புகொள்ளும் மக்களின் எந்த விவரத்தையும் நாங்கள் கேட்கமாட்டோம். எங்கள் குழு ஆராய்ந்து அதை இணையத்தில் பதிவேற்றம் செய்வோம். யார் வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம். தமிழகத்தின் சொத்து மதிப்பு தோராயமாக ரூ. 25 லட்சம் கோடி இருக்கும் அதில், 10 சதவீதம் திமுகவினரிடம் உள்ளது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.