அஞ்சலக சேமிப்பு மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்பு உள்ளிட்ட திட்டங்களுக்கு இன்று ஜனவரி 1 முதல் வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட உள்ளன. வங்கிகள் நிரந்தர வைப்பு தொகைக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியதைத் தொடர்ந்து, அஞ்சலக சேமிப்பு திட்டத்திற்கான வட்டியும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்படி, ஒன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரையிலான வைப்பு நிதி திட்டங்களுக்கான வட்டி விகிதம் 1.1 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டத்தில் தற்போது 7.6 சதவீதம் வட்டி வழங்கப்பட்டு வரும் நிலையில், 8 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.
இதேபோன்று, என்.எஸ்.சி எனப்படும் தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்துக்கான வட்டி விகிதம் 6.8 சதவிகிதத்தில் இருந்து 7 சதவீதமாக உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் மற்றும் சுகன்யா சம்ரிதி எனப்படும் செல்வமகள் சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.