லாரி மீது ஏறி நடனம் ஆடிக்கொண்டே கீழே குதித்த துணிவு ரசிகருக்கு நேர்ந்த விபரீதம்!

அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் இன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. இன்று நள்ளிரவு 1 மணிக்கு ரோகினி திரையரங்கில் வெளியான துணிவு பட சிறப்பு காட்சியை காண ஏராளமான அஜித் ரசிகர்கள் வருகை தந்து, பட்டாசுகள் வெடித்தும், நடனமாடியும் உற்சாகமாக கொண்டாடி வந்தனர்.
image
அப்போது அதில் ரசிகர் ஒருவர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மெதுவாக சென்று கொண்டிருந்த ட்ரெய்லர் லாரி மீது ஏறி நடனம் ஆடியபடி கீழே குதித்த போது, அவருக்கு  முதுகுத்தண்டில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகிலிருந்த ரசிகர்கள் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
image
விசாரணையில், அவர் சிந்தாதிரிப்பேட்டை ரிச்சி தெருவை சேர்ந்த பரத்குமார் (19) என்பதும், ரோகினி திரையரங்கில் துணிவு படம் பார்க்க வந்ததும் தெரியவந்தது. இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பரத்குமார் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். இந்த மரணம் குறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். வாலிபர் உயிரிழந்த சம்பவம் அஜித் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.