புதுடெல்லி: பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, இளைஞர் அணி தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா ஆகியோர் சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் சென்ற போது, ‘எமர்ஜென்சி’ கதவை திறந்தது குறித்து விசாரணை நடத்த ஒன்றிய அரசின் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக பாஜ தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டதில் இருந்து தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். கடந்த டிசம்பர் 10ம் தேதி திருச்சியில் பாஜ இளைஞர் அணி மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பாஜ தலைவர் அண்ணாமலை, இளைஞர் அணி தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா ஆகியோர் பங்கேற்றனர். இதில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து திருச்சிக்கு இண்டிகோ தனியார் விமானத்தில் அண்ணாமலை, தேஜஸ்வி சூர்யா சென்றனர்.
சென்னை விமான நிலையத்தில் விமானத்தில் ஏறிய அண்ணாமலை, தேஜஸ்வி சூர்யா ஆகியோர் புறப்படும் நேரத்தில் அவசர கால(ஏமர்ஜென்சி) கதவிற்கான பட்டனை அழுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், அவசர கால கதவு திடீரென திறந்து உள்ளது. இதனால், விமானத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விமானத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்ததால் பயணிகளை இறக்கி விட்டு பின்னர் சோதனைகள் நடத்தி விமானம் தொடர்ந்து இயக்கப்படும். அதன்படி விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் இறக்கி விடப்பட்டனர். தொடர்ந்து மீண்டும் விமானம் சோதனை செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தால் பல மணி நேர காலதாமதத்துக்கு பிறகு திருச்சி புறப்பட்டு சென்றது. நடந்த சம்பவத்துக்கு அண்ணாமலை, மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்ததாக செய்திகள் வெளியானது. தரையில் நடந்த இந்த சம்பவம், நடுநானில் நடந்திருந்தால் விமானம் விபத்துக்குள்ளாகி, பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் என்று சமூக வலைதளங்களில் ஏராளமானோர் அச்சம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் 39 நாட்களுக்கு பிறகு, இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்த உத்தரவிட்டிருப்பதாக ஒன்றிய அரசின் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம்(டிஜிசிஏ) தெரிவித்துள்ளது என்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
விசாரணை அறிக்கை அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப் படும் என்று டிஜிசிஏ வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையே இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானநிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், சென்னை- திருச்சி விமானத்தின் அவசர கால கதவை பயணி ஒருவர் கடந்த டிசம்பர் 10ம் தேதி தவறுதலாக திறந்துவிட்டார். தன்னுடைய செயலுக்கு உடனடியாக, அந்த பயணி மன்னிப்பு கேட்டுக்கொண்டார். உரிய சோதனைகளுக்கு பிறகு விமானம் திருச்சி புறப்பட்டது. இதனால் பாதுகாப்பு குறைபாடு எதுவும் ஏற்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.