இடைத்தேர்தல்: 'நாங்கள் போட்டியிடுவோம், பாஜக போட்டியிட்டால் ஆதரவு அளிப்போம்' – ஓபிஎஸ்

Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிப். 27ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அங்கு சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த தமிழ்மகன் ஈவேராவின் திடீர் மறைவால் இந்த இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், ஆளும் திமுக தரப்பு காங்கிரஸ் கட்சிக்கே மீண்டும் அந்த தொகுதியை வழங்கியுள்ளது. ஆனால், இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. 

ஆனால், எதிர்க்கட்சித் தரப்பில் இன்னும் குழப்பமே நீடிக்கிறது. கடந்த சட்டப்பேரவை தேர்தலில், ஈரோடு கிழக்கு தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போதும், அதிமுக கூட்டணி தமாகா கட்சிக்கே அந்த தொகுதியை ஒதுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இபிஎஸ் தரப்பு இந்த இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளரை நிறுத்த விருப்பம் தெரிவித்தது. 

தொடர்ந்து, தமிழ் மாநில காங்கிரஸ் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடாது எனவும் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கிறது எனவும் அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் நேற்று அறிவித்தார். அதிமுகவில் இபிஎஸ் தரப்பு போட்டியிட்டாலும் ஏ, பி, படிவங்களில் ஓபிஎஸ், இபிஎஸ் கையெழுத்திடும் நிலை உள்ளது. இந்நிலையில், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் ஓ. பன்னீர்செல்வம் இன்று காலை தனது ஆதரவாளர்களுடன் செய்தியாளர் சந்திப்பை மேற்கொண்டார்.   

இரட்டை இலை என்னவாகும்?

அப்போது பேசிய அவர்,”2026ஆம் ஆண்டு வரை ஒருங்கிணைப்பாளராக செயல்பட தொண்டர்கள் அனுமதி அளித்துள்ளார்கள். நான் பொதுக்குழுவில் மிகவும் அவமானப்படுத்தப்பட்டேன். ஏ, பி, படிவங்களில் இரட்டை இலை சின்னத்தை கோருவோம். ஈரோடு கிழக்கு தொகுதியில் நாங்கள் இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளரை அறிவிப்போம். எங்கள் தரப்பில் போட்டியிடும் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்.

எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து செயல்படுவதே எங்களது நிலைப்பாடு. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வுதான் எங்களின் நிலை, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார். கூட்டணி கட்சிகள் எங்களிடம் தொடர்ந்து பேசி வருகின்றன. பாஜக, பாமக, த.மா.கா உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவை கோருவோம். 

‘பொதுக்குழு வழக்கில் தீர்ப்புக்கு காத்திருக்கிறோம்’

ஈரோடு கிழக்கு தொகுதியில் பாஜக போட்டியிட முடிவெடுத்தால், எங்களின் ஆதரவு அவர்களுக்கு முழுவதுமாக உள்ளது. பாஜக விருப்பப்பட்டால், தேசிய கட்சி என்ற அடிப்படையில் அவர்களுக்கு போட்டியிட நாங்கள் வாய்ப்பளிப்போம். இரட்டை இலை சின்னத்தை முடங்கிபோவதற்கு நான் ஒருபோதும் காரணமாக இருக்க மாட்டேன். அதிமுக பழைய நிலைக்கு வரும் வரை, சட்டப் போராட்டம் தொடரும்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து எங்கள் இருதரப்பு இதுவரை பேசிக்கொள்ளவில்லை. இரட்டை இலை சின்னம் கிடைக்காவிட்டால், வேறு சின்னத்தில் போட்டியிடுவோம். தற்போதுவரை, அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் என்ற பதிவுதான் தேர்தல் ஆணையத்தில் இருக்கிறது.

அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். சசிகலா தரப்பில் இதுவரை எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை. அதிமுக பிளவுபட்ட அணிகளாக தேர்தலை சந்திக்க எங்களுக்கு விருப்பம் இல்லை” என்றார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.