ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியும் இல்லை; யாருக்கும் ஆதரவும் இல்லை: பாமக

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியும் இல்லை, யாருக்கும் ஆதரவும் இல்லை என்று பாமக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக பாமக வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 27ம் நாள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கும் நிலையில், அது குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் உயர்நிலைக்குழு கட்சியின் நிறுவனர் தலைமையில் கூடி விவாதித்தது. கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

‘‘ இடைத்தேர்தல்கள் தேவையற்றவை; மக்களின் வரிப் பணத்தையும், நேரத்தையும் வீணடிப்பவை. அதனால் தான் சட்டமன்ற உறுப்பினர் காலமானதாலோ, கட்சித் தாவியதாலோ சட்டப்பேரவை உறுப்பினர் பதவி காலியானால் அங்கு இடைத் தேர்தல் நடத்தத் தேவையில்லை; அங்கு பொதுத்தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெற்றதோ அதே கட்சியைச் சேர்ந்த ஒருவரை சட்டமன்ற உறுப்பினராக்கிவிடலாம்’’ என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு. இதையே பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து கடைபிடித்து வருகிறது.

அதன்படியே ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலிலும் போட்டியிடுவதில்லை; எந்தக் கட்சிக்கும் ஆதரவு அளிப்பதில்லை என்று உயர்நிலைக்குழு கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.