ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அடுத்தடுத்து கமலாலயம் வந்த எடப்பாடி அணி, ஓ.பி.எஸ் – நடந்தது என்ன?!

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈவேரா சமீபத்தில் காலமானார். இதனால், அந்த தொகுதி காலியாக அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்த மாதம் 27-ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் எனவும், இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 31-ம் தேதி தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டது. மார்ச் 2-ம் தேதி வாக்கு எண்ணப்படும் என தேர்தல் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அரசியல் களம் பரபரப்பாகியிருக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி அறிவித்துள்ளார்.

பாஜக தலைவர்களுடன் எடப்பாடி தரப்பு சந்திப்பு

எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இடைத்தேர்தலில் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளது. ஓ. பன்னீர்செல்வம் தரப்பிலும் இடைத்தேர்தலில் வேட்பாளரை களம் இறக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், பா.ஜ.க போட்டியிட்டால் நாங்கள் ஆதரவு தருவோம் என ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார். கடந்த தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இருந்த பா.ஜ.க-வும் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசித்து வருகிறது.

அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் உள்ள நிலையில், அ.தி.மு.க-வுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா என்பதும் சந்தேகம் இருக்கிறது. இந்த நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளை, அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ள ஜெயக்குமார், தங்கமணி, கே.பி முனுசாமி, செங்கோட்டையன் உள்ளிட்ட அ.தி.மு.க முக்கிய தலைவர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

பாஜக தலைவர்களுடன் ஒபிஎஸ் சந்திப்பு

20 நிமிடங்கள் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “இடைத்தேர்தலில் ஆதரவு அளிக்க கோரி பா.ஜ.க-வுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். பா.ஜ.க-வின் நிலைப்பாடு என்ன என்பதை அந்த கட்சியின் தலைவர் அண்ணாமலை அறிவிப்பார்” எனத் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம், அவரின் ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் மாலை 4 மணிக்கு அண்ணாமலையை சந்தித்தார்,

அதன்பிறகு பேசிய ஒ.பன்னீர் செல்வம், ” இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. இந்த இடைத்தேர்தலில் பா.ஜ.க தனித்து போட்டியிட்டால் முழு ஆதரவு தருவோம்” எனத் தெரிவித்திருக்கிறார். இதனால் இப்போது அரசியல் களம் பரபரப்பாகி இருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.