கயத்தாறு: தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பாரதி நகர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கணபதி என்பவரின் மகன் வேலுச்சாமி. இவர் நேற்றிரவு தனது வீட்டின் அருகே உள்ள அவருக்கு சொந்தமான ஆட்டு தொழுவத்தில் தனது 7 ஆடுகளை அடைத்து விட்டு இரவு உறங்கியுள்ளார். இன்று காலை தொழுவத்திற்கு சென்று பார்த்தபோது தொழுவத்திலிருந்து வெறி நாய்கள் ஓடுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது 7 ஆடுகளும் வெறிநாய்கள் கடித்து குதறியதில் பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து கயத்தாறு போலீசில் புகார் செய்தார். மேலும் கால்நடைத் துறையினர், வருவாய் ஆய்வாளர், கிராம உதவியாளர் ஆகியோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உயிரிழந்த ஆடுகளின் மொத்த மதிப்பு ஒரு லட்சம் இருக்கும் என தெரிகிறது. இந்த சம்பவம் கயத்தாறு வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.