சாத்தூர்: சாத்தூர் அரசு மருத்துவமனையில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் சனிக்கிழமை (ஜன.21) திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மதுரையிலிருந்து கலிங்கப்பட்டி செல்லும் வழியில் சாத்தூர் அரசு மருத்துமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுவோரிடம் மருத்துவர் வருகை, சிகிச்சை அளிக்கும் முறை, மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகிறதா? என்றும் முறையாக சிகிச்சை அளிக்கப்படுகிறதா? என்றும் கேட்டறிந்தார்.
மேலும், புறநோயாளிகளாக சிகிச்சைபெற்றுச் சென்றோரிடம் சிகிச்சையின் தரம் குறித்தும், மருத்துவமனையில் உள்ள வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். அதோடு, மருந்தகத்தில் மருந்து, மாத்திரைகள் இருப்பு குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
அதன்பின்னர், கோவில்பட்டி வழியாக கலிங்கப்பட்டிக்கு புறப்பட்டுச்சென்றார். அமைச்சரின் திடீர் ஆய்வால் சாத்தூர் அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.