சேது சமுத்திர திட்டம்: மீன் பிடித்தொழில், சூழலியல், பொருளாதார சிக்கல்கள் என்னென்ன? – விரிவான பார்வை

கடந்த 12.1.2023-அன்று கூடிய தமிழ்நாடு சட்டசபையில் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதற்கு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. இந்தத் திட்டம் குறித்து முதலமைச்சர் சட்டசபையில் உரையாற்றியபோது, “அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோர் நிறைவேற்ற பாடுபட்ட திட்டம் இந்த சேது சமுத்திர திட்டம். இதை நிறைவேற்றும் வகையில் இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டிருக்கிறது” எனக் குறிப்பிட்டுப் பேசினார்.

இந்தத் தீர்மானம் அறிமுகம் செய்யப்பட்டபோது எழுந்த சர்ச்சைகள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. இந்தத் திட்டம் சூழலியல் பிரச்னைகளைக் கொண்டுவரும் என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு 13.1.2023 அன்று அறிக்கை வெளியிட்டது. அதன் பிறகு இது தொடர்பான விவாதங்கள் தீவிரமாக எழத்தொடங்கின. அதில் முக்கிய ஆபத்ததாகக் கூறப்பட்டது, அந்தப் பகுதியில் இருக்கும் கடல் வாழ் உயிரினங்கள் பேரழிவை சந்திக்கும் என்பதுதான்.

கருணாநிதி – பூவுலகின் நண்பர்கள்

இந்தத் திட்டத்தின் சூழலியல் பிரச்னை குறித்து, பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் வழக்கறிஞர் வெற்றிச்செல்வனிடம் பேசினோம். “உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு நிலுவையில் இருக்கிறது. எனவே நீதிமன்றத்தில் ஒரு முடிவு எட்டப்படாத வரையிலும், இந்தத் தீர்மானத்தின் மீது அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது. அரசு தீர்மானம் கொண்டுவந்த அந்த நேரத்தில்தான், உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்தத் திட்டம் தொடர்பாக கருத்து தெரிவிக்க மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

வெற்றிச்செல்வன், வழக்கறிஞர்

இந்த நிலையில், சேது சமுத்திர திட்ட விவகாரத்தில் அடுத்தகட்ட நகர்வு உடனே நடக்கப்போவது இல்லை. குறிப்பாக, அப்படி அனுமதி பெற்றாலும் பல ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டை புதிதாக எடுக்க வேண்டும். அதன்பிறகு கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த வேண்டும், இதில் பல படிநிலைகள் இருக்கின்றன. இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்ததால் மட்டும், அரசு நிச்சயம் நிறைவேற்றும் என்று சொல்ல எந்த உத்தரவாதமும் இல்லை. இதற்கு எதிராக எங்களைப் போல பல அமைப்புகளும் குரல் கொடுத்து வருகின்றன” என்றார்.

இந்தத் திட்டத்தால் மீன்பிடி தொழில் பாதிப்பைச் சந்திக்கும் என்ற வாதமும் முன்வைக்கப்பட்டு வருகிறது. எனவே இது தொடர்பாக தென்னிந்திய மீனவர் நலச் சங்கத்தின் தலைவர் கு.பாரதியிடம் பேசினோம். “இந்தத் திட்டம் வரக்கூடாது என பல ஆண்டுக்காலமாகப் போராடி வருகிறோம். இது தொடர்பாக கடந்த 2004-ம் ஆண்டு, `மீனவர்களின் வாழ்நிலை பறிப்பு’ எனும் தலைப்பில் அனைத்து மீனவர்கள் சங்கம் சார்பாக அறிக்கை வெளியிட்டோம். அன்று தொடங்கி இது தொடர்பாக பேச்சுகள் எழும்போதெல்லாம், எங்கள் எதிர்ப்பைப் போராட்டங்கள் வாயிலாகவும், அறிக்கைகள் வாயிலாகவும் தெரிவிக்கிறோம்.

பாரதி, தலைவர், தென்னிந்திய மீனவர் நலச் சங்கம்

இந்தத் திட்டத்தை அமல்படுத்தினால் நேரடியாக 6 கடலோர மாவட்டங்களான நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராநாதபுரம், தூத்துக்குடி ஆகியவை பாதிக்கப்படும். மீனவர்கள், சூழல் அமைப்புகள் அதிருப்தி தெரிவிக்கும் நிலையில், இது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் என தவறாக புரிந்து கொள்ளப்பட்டு வருகிறது.

2004-ம் ஆண்டின் மீனவர் சங்கத்தின் அறிக்கை

சேது சமுத்திர திட்டம் பற்றி உண்மை நிலையை சொன்ன ஒரே காரணத்துக்காக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி எங்களை, `சிங்களவர்கள் கைக்கூலி, அவர்கள் தூண்டுவதால் திட்டத்தை எதிர்க்கிறார்கள்’ என்று கூறினார். மீனவச் சமூகத்தை இழிவுபடுத்தியதைக் கண்டித்து முன்னாள் முதலமைச்சர் வீட்டை முற்றுகையிட்டோம். அதையடுத்து, `இனி மீனவர்கள் குறித்து இழிவாகப் பேச மாட்டேன்’ எனக் கூறினாரே தவிர… திட்டத்தைக் கைவிடுவதாக அறிவிக்கவில்லை. இந்த நிலையில், தற்போது இந்தத் திட்டம் மீண்டும் தமிழக அரசால் கையிலெடுக்கப்பட்டிருக்கிறது.

கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டப் பிறகு இந்திய எல்லைக்குள் மீன்பிடித்தாலே தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுத்தள்ளப்படுகிறார்கள். இந்த நிலையில் புதிதாக இந்தத் துறைமுகம் வந்தால், அவர்கள் சீரிய வேகத்தில் சீண்ட தொடங்குவார்கள். சென்னையில் அமைக்கப்பட்ட துறைமுகத்தால் மட்டுமே, 18 மீனவ கிராமங்கள் அழிந்திருக்கின்றன. தற்போது உருவாக்கப்படவிருக்கும் இந்தத் திட்டம் பெரும் அழிவை உண்டாக்கும். குறிப்பாக, உயிர்ச்சுழல் (Bio-Diversity) முற்றிலுமாகப் பாதிக்கப்படும்.

தமிழக மீனவர்கள்

பொருளாதாரத்திலும் இது மாற்றத்தை ஏற்படுத்தும், நேரத்தை மிச்சப்படுத்தும் என்கிறார்கள். ஆனால் மாதக்கணக்கில் பயணம் செய்வோருக்கு இதெல்லாம் பெரிய விஷயமாக இருக்காது. அதே போல், கப்பலின் தன்மை மற்றும் அதன் வேகத்துக்கு தகுந்தாற்போல் எரிப்பொருள் மாறுபடும். இந்த நிலையில், இந்தக் கால்வாயில் மட்டும் மிதமான வேகத்தில் வர மாற்று எரிபொருளை பயன்படுத்த முடியாது. மீன்கள் உற்பத்தியாகும் முக்கிய இடமாக இருக்கும் இதைக் கலைத்தால், மொத்த தமிழக மீனவர்களின் நிலை மோசமாகிவிடும். தற்போது குறைந்துவரும் மீன்கள் உற்பத்தியை அதிகரிக்க அரசிடம் திட்டமில்லை. இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்படும் மீனவர்களைக் காப்பாற்றவோ, ஆறுதல் கூறவோ கட்சிகள் ஒன்று கூடவில்லை. ஆனால், மீனவர்களுக்கு எதிராக இருக்கும் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற எப்படி அனைத்து கட்சிகளும் ஒன்றுகூடுகின்றன? இது அங்கீகரிக்கப்பட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகள் சம்பந்தப்பட்ட விவகாரம். இது அரசியல் கட்சிகள் மார்தட்டி, பெருமைப்பட வேண்டிய விஷயமில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.

மீனவர்கள்

இது குறித்துப் பேசிய நெய்தல் நில செயற்பாட்டாளரும், ஆராய்ச்சியாளருமான ஜோன்ஸ், “ `சேத்து கால்வாய்’ என்பதே மருவி ‘சேது கால்வாய்’ என அழைக்கப்படுகிறது. ஆம் அது புனிதமான இடத்தில்தான் வரப்போகிறது. என்னைப் பொறுத்தவரை அது ஒரு சூழலியல் புனிதம். ராமேஸ்வரம் நல்ல சூழல் நிறைந்த ஓர் இடம். முத்துபேட்டை, கோடியக்கரை, ராமாவரம், பாயின்ட் கேலிபெர், நாகப்பட்டினம், பிச்சாவராம் என அடுத்தடுத்த உயிர்ச்சூழல் மிகுந்து காணப்படுகின்றன. இப்படி சுற்றுச்சூழல் திறம் மிகுந்த இந்த இடத்தில் கடந்த 10 ஆண்டுகளில் அரசு என்ன செய்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்வது அவசியம். காரணம், சூழலைக் கருத்தில் கொள்ளாமல் இந்தத் திட்டத்தைக் கொண்டுவர முயல்வது தவறுதான். அதே நேரம் இதற்கு முன்பு அங்கு அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டத்தின் நிலை என்னாகும் என்ற கேள்வி எழுகிறது.

ஜோன்ஸ், நெய்தல் நில செயற்பாட்டாளர்

குறிப்பாக தனுஷ்கோடி- ராமேஸ்வரம் பகுதியை இணைக்க நெடுஞ்சாலை (Asian Highway) அமைக்க திட்டமிட்டிருக்கின்றனர். அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் ராமேஸ்வரம்-தலைமன்னாரை இணைக்க கடலுக்கு அடியில் ரயில் பாதை அமைக்கவிருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறினார். அதற்காக ரூ.24,000 கோடி ஒதுக்குவதாக சொன்னார்கள். அப்படி ரயில் பாதை அமைத்தால், சேது கால்வாயை எங்கு அமைப்பார்கள். இதில் எது உண்மை? கடலுக்கு அடியில் ரயில் பாதையா? கடலில் கால்வாயா? என்பதை விளக்க வேண்டும்.

ஏற்கெனவே, பாம்பன் பாலத்தில் டபுள் டக்கர் பாலத்தைக் கட்டி வருகிறார்கள். இது தொடங்கப்பட்டதிலிருந்து தற்போது வரை 40-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இறந்திருக்கிறார்கள். கடலுக்கு நடுவே அமைக்கப்படும் திட்டத்தில் எத்தனை உயிரிழப்புகள் ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்திருக்கிறது.

தனுஷ்கோடி

மேலும் காற்றாலை மின் உற்பத்தி செய்ய அங்கு காற்றாலைகள் அமைக்க டென்மார்க்குடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள். தலைமன்னார் பகுதிகளில் காற்றாலைகள் அமைக்கப்பட்டுவிட்டன. இப்படி அதைச் சுற்றி எத்தனை திட்டத்தைத்தான் அமைப்பார்கள். தற்போதுவரை எழுதப்படாத ஆய்வாக தனுஷ்கோடியை மக்கள் வாழ தகுதியற்ற இடமாகச் சொல்கிறார்கள். அப்படி இருக்க இத்தனை திட்டங்களை மேற்கொள்ள எப்படி முடிகிறது.

இவர்களுக்கு மக்களின் நலன் தாண்டி, எல்லா திட்டங்களிலும் காசு பார்க்க வேண்டும். அதனால்தான், மாநிலக் கட்சிகள் முதல் மத்தியிலுள்ள கட்சி வரை இந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் தந்திருக்கின்றன. ஒருவேளை, துறைமுகத்தைக் கட்டினாலும் கப்பல் நின்று சரக்குகளை இறக்க இடம் தேவைப்படும். ஆனால், தனுஷ்கோடியில் யார்டு அமைப்பது நடக்காத காரியம். ஏனென்றால் அது எரோடிங் கோஸ்ட். நேற்று பார்த்த மணல் பரப்பு அடுத்த நாளே அரிக்கப்பட்டிருக்கும். எனவே, இவர்கள் சொல்லும் திட்டத்தைக் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை.

தனுஷ்கோடி

கடலுக்கு அடியில், பூமியின் அடிப்பகுதியில் ஏற்படுத்தப்படும் மாற்றம், இன்னும் மோசமான விளைவுகளை உண்டாக்கும் என்பதே உண்மை. எனவே, இந்தத் திட்டத்தை உருவாக்க, சுற்றுசூழல் தாக்க மதிப்பீடு EIA (Environmental Impact Assessment) மதிப்பீடு செய்வார்கள். ஆனால், அதற்குப் பதிலாக சூழலியல் தாக்கமதிப்பீடு (Ecological Impact Assessment) செய்ய வேண்டும். அதை ஒட்டுமொத்த ராமேஸ்வர தீவுக்கே செய்ய வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.