நெல்லை: தென்காசி, சங்கரன்கோவில் வழியாக இயக்கப்படும் எர்ணாகுளம் – வேளாங்கண்ணி சிறப்பு ரயிலின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. எர்ணாகுளத்தில் இருந்து கொல்லம், தென்காசி, விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, பட்டுக்கோட்டை வழியாக வேளாங்கண்ணிக்கு வாராந்திர சிறப்பு ரயில் கடந்த சில மாதங்களாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்கள் ஜனவரி மாதம் கடைசி வாரம் வரை மட்டும் இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த ரயில்களின் சேவை பயணிகளின் வசதிக்காக பிப்ரவரி 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி எர்ணாகுளம் – வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயில் (06035) பிப்ரவரி 4, 11, 18, 25 ஆகிய சனிக்கிழமைகளில் எர்ணாகுளத்தில் இருந்து மதியம் 1.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.40 மணிக்கு வேளாங்கண்ணி சென்று சேரும். மறு மார்க்கத்தில் வேளாங்கண்ணி – எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரயில் (06036) பிப்ரவரி 5, 12, 19, 26 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் வேளாங்கண்ணியில் இருந்து மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11.40 மணிக்கு எர்ணாகுளம் சென்று சேரும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு நேற்று தொடங்கியது.