வெலிங்டன்,-நியூசிலாந்து நாட்டின் அடுத்த பிரதமராக, ஆளும் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்தவரும், தற்போதைய கல்வி அமைச்சருமான கிறிஸ் ஹிப்கின்ஸ், 44, விரைவில் பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடான நியூசிலாந்தின் பிரதமராக ஜெசிந்தா ஆர்டன், ௨௦௧௭ முதல் பதவி வகித்து வருகிறார்.
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையை, இவர் கையாண்ட விதம், உலகெங்கும் பாராட்டுதல்களை பெற்றுத் தந்தது.
இந்நிலையில், தன் பதவியை ராஜினாமா செய்வதாக ஜெசிந்தா ஆர்டன் சமீபத்தில் அறிவித்தார்.
பிப்., ௭ம் தேதி பதவி யில் இருந்து விலகப் போவதாக அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, நியூசிலாந்தின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்தது. துணை பிரதமர் கிராண்ட் ராபர்ட்சன், பிரதமர் பதவியை ஏற்க மறுத்தார்.
இந்நிலையில், தொழிலாளர் கட்சியின் நிர்வாக உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடந்தது.
இதில் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படுபவரே, அடுத்த பிரதமராக முடியும்.
இதில், தற்போதைய கல்வி அமைச்சரான கிறிஸ் ஹிப்கின்ஸ், 44, ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து, அடுத்த சில நாட்களில் இவர் பிரதமராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் அக்டோபரில் பார்லிமென்ட் தேர்தல் நடக்கவுள்ளதால், அடுத்த எட்டு மாதங்களுக்கு மட்டுமே, கிறிஸ் ஹிப்கின்ஸ் பிரதமராக பதவி வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்