பாலியல் தொல்லை விவகாரம்; மகளிர் ஆணைய தலைவரை சஸ்பெண்ட செய்க.!

வட மேற்கு டெல்லியின் கஞ்சவாலா பகுதியில், புத்தாண்டு அன்று 20 வயதான அஞ்சலி சிங் என்ற இளம் பெண் சென்ற இருசக்கர வாகனம் மீது, மது போதையில் 5 பேர் வந்த கார் மோதியது. அஞ்சலி சிங்கின் இருசக்கர வாகனம் மீது காரில் மோதிய கும்பல், காரை நிறுத்தாமல் சென்றுள்ளது. அஞ்சலி சிங்கின் உடலுடன், சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு காரை அந்த நபர்கள் இயக்கினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அதைத் தொடர்ந்து சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது தலைநகர் டெல்லியில் போலீசாரின் கவனக்குறைவே இச்சம்பவத்திற்கு காரணம் என மத்திய உள்துறை அமைச்சகம் குற்றம்சாட்டியது. இதையடுத்து சம்பவத்தன்று பணியில் இருந்த 11 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்தநிலையில் டெல்லி மகளிர் ஆணைய தலைவராக இருப்பவர் ஸ்வாதி மாலிவால். இரவு நேரங்களில் பெண்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் 2வது நுழைவு வாயிலுக்கு எதிரே கடந்த 19ம் தேதி அதிகாலை 3.11 மணியளவில் நின்று கொண்டிருந்தார். அப்போது, கார் ஓட்டுனர் ஒருவர் மதுபோதையில் அவரிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டினார்.

இது குறித்து ஸ்வாதி மாலிவால் தனது ட்விட்டர் பதிவில்,”நேற்றிரவு டெல்லியில் பெண்களின் பாதுகாப்பு சூழல் பற்றி ஆய்வு செய்வதற்காக சென்றேன். அப்போது, குடிபோதையில் இருந்த கார் ஓட்டுனர் ஒருவர் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அவரை பிடிக்க முயன்ற போது, காரின் ஜன்னலில் எனது கையை சிக்க வைத்து விட்டு, காருடன் என்னை இழுத்து சென்றார். டெல்லியில் மகளிர் ஆணைய தலைவரே பாதுகாப்புடன் இல்லை எனும்போது, சாதாரண பெண்களின் நிலைமையை கற்பனை செய்து பாருங்கள்,” என வேதனை தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து குடிபோதையில் இருந்த கார் ஓட்டுனர் ஹரீஷ் சந்திர சூர்யவன்ஷி (47) என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் மகளிர் ஆணையத் தலைவியின் டிவிட்டர் பதிவை பகிர்ந்த முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால், ‘‘மகளிர் ஆணையத் தலைவிக்கு பாதுகாப்பு இல்லை என்ற அளவுக்கு குண்டர்களின் மன உறுதி அதிகரித்துள்ளது. அரசியலமைப்பில், இந்த பணி மட்டுமே லெப்டினன்ட் கவர்னருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது’’ என அவர் தெரிவித்தார்.’

இந்தநிலையில் மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவாலை இடைநீக்கம் செய்ய வேண்டும் என பாஜக போர்க்கொடி தூக்கியுள்ளது. இது குறித்து டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவுக்கு டெல்லி பாஜக செய்தித் தொடர்பாளர் பிரவீன் சங்கர் கபூர் எழுதிய கடிதத்தில், ‘‘ஜனவரி 19ம் தேதி ஸ்வாதி மாலிவாலிடம் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான போலீஸ் விசாரணை முடியும் வரை அவரை இடைநீக்கம் செய்ய வேண்டும். அப்போதுதான் விசாரணை நேர்மையாக நடைபெறும்.

மகளிர் ஆணையத் தலைவரைத் துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டவர் ஆம் ஆத்மி கட்சியின் ஊழியர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைவரும் இந்த சம்பவத்தை கண்டித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டதையடுத்து டெல்லி போலீசார் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை ஒரு மணி நேரத்திற்குள் கைது செய்தது திருப்தி அளிக்கிறது.

ஆனால் இது குறித்த சமூக ஊடக அறிக்கைகள் மற்றும் ஊடக அறிக்கைகள், பாலியல் தொல்லை கொடுத்த ஹரிஷ் சந்திர சூர்யவன்ஷி டெல்லியின் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் சங்கம் விஹாரைச் சேர்ந்த தீவிர ஊழியர் என்பது தெளிவாகியுள்ளது” என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.