இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் இந்தாண்டு வெளியான பொன்னியின் செல்வன் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. சோழர்களின் வரலாற்றை புனைவுகளோடு சொல்லியிருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டது முதலே பல்வேறு விமர்சனங்களையும் சிக்கல்களையும் எதிர்கொண்டது. அந்த சிக்கல் படம் வெளியான பின்னரும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இப்போது, அந்த படத்தை எடுத்த இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை சென்னை அண்ணா நகரை சேர்ந்த வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி அதே பெயரில் இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள படத்தில், வரலாற்றை திரித்து இயக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். முக்கிய கதாப்பத்திரமான வந்தியத்தேவன் பெயரை தவறாக பயன்படுத்தியதுடன், தனது சுய லாபத்திறாக வரலாற்றை தவறாக பயன்படுத்தி உள்ளார் என்றும் மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், வரலாற்றின் அடிப்படையில் படம் எடுக்கும் முன்பு உரிய ஆராய்ச்சி மேற்கொண்டிருக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார். வரலாற்றில் உள்ள உண்மை பெயர்களை கல்கியும் பயன்படுத்தி உள்ள நிலையில், போர் தந்திரங்களில் சிறந்து விளங்கிய சோழர்களுக்கு அவமதிப்பு ஏற்படுத்தும் வகையில் இயக்குனர் மணிரத்னம் வரலாற்றை திரித்து உள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதனால், மத்திய அரசு மற்றும் இந்திய தொல்லியல் ஆய்வு துறை ஆகியவற்றிடம் அளித்த புகார்களில் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட வேண்டும் என அவர் அந்த மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.